Jai Bhim: சூப்பர் ஸ்டார், உலக நாயன், தல, தளபதி எங்கே.? மயான அமைதியில் திரையுலகம்.. கொந்தளிக்கும் அருணன்.!

By Asianet TamilFirst Published Nov 15, 2021, 9:44 PM IST
Highlights

'நடிகரும் தயாரிப்பாளருமான சூர்யாவை அடித்தால் ஒரு லட்சம் கொடுப்போம் என்று ஒரு கோஷ்டி அறிவிக்கிறது. ஓடிய அவரது படத்தை தடுத்து நிறுத்துகிறது. நடிகர் சங்கமும் தயாரிப்பாளர்கள் சங்கமும் என்ன செய்கின்றன?'

ஜெய்பீம் பட விவகாரத்தில் சூப்பர் ஸ்டார்கள், உலக நாயகன்கள், தலைகள், தளபதிகள் எங்கே என்றும் இன்று சூர்யாவுக்கு நாளை உங்களுக்கு என்றும் பேராசிரியர் அருணன் எச்சரித்துள்ளார். 

சூர்யா தயாரிப்பு, நடிப்பிலும் ஞானவேல் இயக்கத்திலும் வெளியான‘ஜெய் பீம்’ படம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. 1994-ஆம் ஆண்டில் கடலூரில் நடைபெற்ற ஓர் உண்மைச் சம்பவத்தை மையாக வைத்து இந்தப் படத்தை சூர்யா தயாரித்துள்ளார். படம் வரவேற்பைப் பெற்ற போதிலும், உண்மை நிகழ்வில் அந்தோணிசாமி என்ற சப் இன்ஸ்பெக்டர் பாத்திரத்தை குருமூர்த்தி என்று மாற்றியதும், வன்னியர்களின் பண்பாட்டுச் சின்னமான அக்னி சட்டி காலாண்டர் மாட்டப்பட்டிருந்ததும் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. சூர்யாவுக்கு எதிராக பாமகவினர் திரும்பியுள்ளனர்.

சூர்யாவுக்கு 9 கேள்விகளை எழுப்பி பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கடிதம் எழுதியிருந்தார். இந்தக் கடிதத்துக்கு நடிகர் சூர்யாவும் பதில் கடிதம் எழுதியிருந்தார். இதற்கிடையே நடிகர் சூர்யாவை முதலில் எட்டி உதைப்பவருக்கு ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என்று மயிலாடுதுறை பாமக சர்ச்சையான அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில் சூர்யா, ஜோதிகா ஆகியோர் 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் 5 கோடி ரூபாய் நஷ்டஈடு தர வேண்டும் என்றும் வன்னியர் சங்கம் சார்பில் சூர்யாவுக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. சூர்யாவுக்கு எதிராக சமூக ஊடங்களில் பாமகவினர் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்கள். இதற்கிடையே அக்கினி சட்டி காலாண்டரை மகாலட்சுமி காலாண்ட்ராக மாற்றியதும் சர்ச்சையாகி இருக்கிறது. மகாலட்சுமி காலண்டரை எப்படி மாற்றலாம் என்று பாஜக வரிந்துகட்டத் தொடங்கியுள்ளது.

சூர்யாவைக் குறி வைத்து தாக்கப்படுவதாக புகார் எழுந்துள்ள நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பேராசிரியர் அருணன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “'நடிகரும் தயாரிப்பாளருமான சூர்யாவை அடித்தால் ஒரு லட்சம் கொடுப்போம் என்று ஒரு கோஷ்டி அறிவிக்கிறது. ஓடிய அவரது படத்தை தடுத்து நிறுத்துகிறது. நடிகர் சங்கமும் தயாரிப்பாளர்கள் சங்கமும் என்ன செய்கின்றன? சூப்பர் ஸ்டார்கள், உலக நாயகன்கள், தலைகள், தளபதிகள் எங்கே ? இன்று சூர்யாவுக்கு நாளை உங்களுக்கு” என்று பேராசிரியர் அருணன் தனது காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.  
 

click me!