அன்புமணிக்கு நல்லா உரைக்கிற மாதிரி சொன்னீங்க.. பாரதிராஜாவுக்கு வாழ்த்து சொன்ன ஜி.ராமகிருஷ்ணன்..!

By vinoth kumarFirst Published Nov 17, 2021, 12:59 PM IST
Highlights

கடந்த கால சம்பவங்களைப் படமாக்கும் போது அதை படமாகப் பார்த்துவிட்டு சமூக மாற்றத்திற்கு அது எவ்வகையில் பயனாகும் என்பதை மட்டுமே பார்க்க வேண்டும். அதில் பூதக்கண்ணாடியை அணிந்துகொண்டு குற்றம் பார்க்கத் தொடங்கினால் எந்த ஒரு படைப்பும் எளியோருக்காக பேசாமல் முடங்கிவிடும். 

உங்கள் கருத்துக்களை எப்போதும் செவிகொடுத்து கேட்கும் மனநிலையில் உள்ள மனிதனுடன் ஏன் தேவையற்ற வார்த்தைப் போர்?" என அன்புமணியிடம்  சரியாக உரைத்த இயக்குனர் பாரதிராஜாவுக்கு வாழ்த்துகள் என ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். 

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வெளியாகியுள்ள படம் ஜெய்பீம்,  இந்தப் படம் பழங்குடியின சமூக மக்களின் அவல நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. அதிகார வெறிக்கு பழங்குடியின மக்கள் இரையாவதை ஒரு உண்மை சம்பவத்துடன் தொடர்பு படுத்தி தத்ரூபமாக வெளிப்படுத்தியுள்ளது ஜெய்பீம் திரைப்படம். அதே நேரத்தில் இந்த படத்தில் மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் பெயரை குற்றவாளி கதாபாத்திரத்திற்கு  வைத்துள்ளதாக கூறி பாமகவினர் சர்ச்சை எழுப்பியுள்ளனர். அதேபோல் இந்த படத்தில் வரும் வில்லன் கதாபாத்திரத்தின் பின்பக்கத்தில் வன்னியர்களின் அடையாளமாக அக்னிசட்டி காட்டியிருப்பதும் திட்டமிட்டே வன்னியர்களை இழிவுபடுத்தும் செயல் எனகூறி சூர்யாவுக்கு எதிராக பாமக உள்ளிட்ட வன்னிய ஆதரவு அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் சூர்யாவுக்கு ஆதரவாக அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் குரல் கொடுத்து வருகின்றனர். 

இந்நிலையில், தமிழ்நாடு நடப்பு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் இயக்குநருமான பாரதிராஜா பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு நேற்று கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், கல்வி, காதல், மோகம், சரி, தவறு, சமூக சீர்திருத்தம் இப்படி மனித வர்க்கம் சந்திக்கும் எல்லா நிகழ்வுகளையும் படம்பிடித்து மக்களிடமே முன் வைக்கும் ஒரு இயங்குதளம். பெரும்பாலும் சினிமா என்ற இயங்குதளம் மக்களை நல்வழிப்படுத்தவே முயற்சிக்கும். அதனால்தான் கதாநாயகன் நல்லவனாக சித்தரிக்கப்படுகிறான். பல சமூக, அரசியல் மாற்றங்களின் பங்களிப்பாக சினிமா இருந்திருக்கிறது. பல வாழ்க்கைப் படைப்புகள் நம் முன் வைக்கப்பட்டிருக்கின்றன. அது மக்கள் முன்னிலையில் வைக்கப்படும்போது உண்மை எது? தவறு எது? எனத் தெரிந்தே அவர்கள் அதை வரவேற்றோ, புறந்தள்ளியோ வருகின்றனர். அப்படி ஒரு படைப்பாக வரவேற்கப்பட்டதே "ஜெய்பீம்". அன்பு பிள்ளைகள் சூர்யா-ஜோதிகாவால் தயாரிக்கப்பட்டு தம்பி ஞானவேல் இயக்கத்தில் வெளிவந்த படம்.

கடந்த கால சம்பவங்களைப் படமாக்கும் போது அதை படமாகப் பார்த்துவிட்டு சமூக மாற்றத்திற்கு அது எவ்வகையில் பயனாகும் என்பதை மட்டுமே பார்க்க வேண்டும். அதில் பூதக்கண்ணாடியை அணிந்துகொண்டு குற்றம் பார்க்கத் தொடங்கினால் எந்த ஒரு படைப்பும் எளியோருக்காக பேசாமல் முடங்கிவிடும். இன்றைய எளியோர்களின் சமத்துவ அதிகாரத்திற்காக அன்றே பேசியது நாங்கள்தான். அன்று என் படம் "வேதம் புதிது " முடக்க முயற்சித்தபோது புரட்சித்தலைவர் உடன் நின்றார். அந்த படைப்பு எத்தகைய தாக்கத்தை மக்களிடம் ஏற்படுத்தியது? அது போன்றதொரு படைப்புதான் "ஜெய் பீம்" படமும். இதை படைப்பாக மட்டுமே பார்க்க முயன்றால் நீங்களும், உங்கள் தந்தையும் போராடும் அதே எளியவர்களுக்கான போராட்டம் தான் இது. தம்பி சூர்யாவைப் பொருத்தவரையில் யாரையும் காயப்படுத்தும் தன்மை கொண்டவரல்ல. கல்வி, எளியவர்களுக்கான உதவி என நகர்ந்துகொண்டிருப்பவர். ஒரு இயக்குநரின் சேகரிப்பிற்கு தன்னையும்... தன் நிழலையும் தந்து உதவியுள்ளவர்.

அவருக்கு எல்லோரும் சமம். யாரையும் ஏற்ற இறக்கத்தோடு கண்காணிப்பவரல்ல. தன்னால் எங்கேனும் ஒரு மாற்றம் நிகழுமா? எனப் பார்ப்பவர். அவரை ஒரு சமூகத்திற்கு எதிரானவராக சித்தரிப்பதும்... அவர் மீதான வன்மத்தையும்... வன்முறையை ஏவிவிடுவதும் மிகத்தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும். ஒரு படைப்பின் சுதந்திரத்தை அதன்படியே விட்டுவிடுவது இன்னும் அதிகமான நல்ல படைப்புகளைக் கொண்டுவர உதவும்.

சினிமாவை விட இங்கு கவனம் செலுத்த நிறைய வேலைகள் இருக்கின்றன. சமூக மாற்றங்களுக்கான உங்கள் போராட்டங்களே நிறைய உள்ளது. தங்கள் தகுதிக்கு நீங்கள் இங்கு வர வேண்டாமே. நடுவண் அரசு, மாநில அரசு, சார்ந்திருக்கும் மக்களுக்கான இட ஒதுக்கீடு பிரச்சனைகள் போன்ற எத்தனையோ இடங்களில் உங்களின் குரல் ஒலிக்கட்டும். எங்கள் திரைத்துறையை விட்டுவிடுங்கள். யாருக்குப் பயந்து படம் எடுக்க வேண்டும் எனத் தெரியவில்லை.

இப்படியே போனால் ஒவ்வொரு அரசியல்வாதிகளின் வாசல்களிலும் எங்கள் படைப்பாளிகள் கதை சொல்லக் காத்திருக்க வேண்டுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. வம்படியாக திணித்தோ, திரித்தோ அப்படத்தில் எந்த கருத்துருவாக்கமும் செய்யவில்லை. நீங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க மாற்றங்களும் செய்யப்பட்டிருக்கிறது. திரைத்துறையை அதன் இயல்பில் இயங்க விட கேட்டுக்கொள்கிறேன். உங்கள் கருத்துக்களை எப்போதும் செவிகொடுத்து கேட்கும் மனநிலையில் உள்ள மனிதனுடன் ஏன் தேவையற்ற வார்த்தைப் போர்? என பாரதிராஜா தெரிவித்திருந்தார். பாராதிராஜாவின் இந்த பேச்சுக்கு ஜி.ராமகிருஷ்ணன் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;-  திரைத்துறையை அதன் இயல்புக்கு இயங்கவிடுங்கள் என சரியாக உரைத்த இயக்குனர் பாரதிராஜாவுக்கு வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

click me!