
மாதவனின் கதையை கேட்டால் எந்த ஆணுக்கும் கண்ணீர் வரத்தான் செய்யும்!...’
மாதவனுக்கென்ன நல்லாதானே இருக்கார்? இறுதிச்சுற்று, விக்ரம் வேதான்னு அவரோட லேட்டஸ்ட் படமெல்லாம் ஹிட்டுதானே!’ என்று நீங்கள் அதிராதீர்கள். இவர் அந்த மேடி மாதவன் இல்லை, லேடி தீபாவின் மாதவன்.
தீபாம்மாவின் கட்சியில் தொண்டனாக இருப்பதே பெரும் கஷ்டம் எனும் நிலையில் அந்த தலைவியின் கணவராக இருப்பது எம்புட்டு டார்ச்சரான விஷயமென்பது மாதுக்குதான் தெரியும்! எப்போ தூங்குகிறார், எப்போ எழுகிறார், எப்போ அரசியல் பேசுகிறார் என்று எவனுக்கும் தெரியாத நிலையில் அந்த தலைவியின் மனமறிந்து செயல்பட தவறவில்லைதான் மாது. ஆனாலும் தீபாவுக்கு இவரை ஆகவில்லை.
எந்த குடும்பத்தில்தான் கணவன் - மனைவிக்குள் சண்டையில்லை. ஆனால் மாதுவின் பிரச்னையோ வேறு வகை. குறிப்பாக இந்த ஆயில் ராஜா கொடுக்கும் ஆல்டைம் டார்ச்சர்தான் இருப்பதிலேயே பெரிய டார்ச்சர்.
இவங்க இம்சையே வேண்டாமென்றுதான் பன்னீருக்கு போட்டியாக அம்மா சமாதியில் தியானம் செய்துவிட்டு, எடப்பாடிக்கு போட்டியாக கட்சி ஆரம்பித்து கையோடு தமிழகம் முழுக்க நிர்வாகிகளை நியமித்தார். மாதுமாவின் இந்த மெர்சல் வேகத்தை பார்த்து தமிழகமே அரண்ட நிலையில், சில மாவட்டங்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் சென்றபோது அரசியலரங்கமே ஆட்டம் கண்டது.
இந்த நிலையில்தான் மாதுவை இப்படியே விட்டால் மோடிக்கே சவாலாவார் என்று நினைத்தோ என்னவோ தீபாம்மா அவரை மீண்டும் வாழ்க்கை ஆட்டத்தில் சேர்த்துக் கொண்டார்.
இனியெல்லாம் இனிமையான வாழ்வே! என்று நம்ம்ம்ம்ம்ம்பி வந்த மாதும்மாவுக்கு மறுபடியும் வந்திருக்கிறது சோதனை. அதுவும் அதே ராஜா வடிவில்.
ஆர்பாட்டம் நடத்த குடியாத்தம் போன இடத்தில் தீபா மற்றும் மாதவனுக்கு இடையில் ராஜா நுழைந்தது சிக்கலாகி, பஞ்சாயத்துடனே சென்னை திரும்பியிருக்கின்றனர். இதன் நீட்சியாகத்தான் கடந்த வெள்ளிக்கிழமையன்று இரவில் சென்னை மாம்பழம் காவல் நிலையத்தில் ராஜா மீது புகார் சொல்லி அமர்ந்தார். இந்த நேரத்தில் ராஜாவுடன் ஸ்டேஷனுக்கு வந்த தீபா , ‘ராஜா மேலே எந்த தப்புமில்ல’ என்று மாதவனுக்கு பேரதிர்ச்சியை தந்துவிட்டு கிளம்பினார்.
அதன் பிறகு தனது தி.நகர் வீட்டிலும் தீபா இல்லை. எங்கே இருக்கிறார் என்று மாதவனுக்கே தெரியவில்லையாம்.
இதனால் நொந்து கிடக்கும் மாது, ’என்னோட வாழ்க்கையில மட்டும் ஏன் இத்தனை சோகம்?நான் திருமணம் செஞ்சது தப்பா? நான் தனிக்கட்சி துவங்குனது தப்பா? பெரிய அரசியல்வாதியாக நினைச்சது தப்பா?’ என்று தன் தொண்டரடி பொடிகளிடம் புலம்புகிறாராம்.
மாதுக்குட்டியின் கேள்விக்கு பதில் சொல்வார் யாரோ?