
இறக்குமதி மணல் விவகாரத்தில் 3 மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மணல் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளில் இருந்து மணலை இறக்குமதி செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதை அடுத்து, மலேசியாவில் இருந்து மணல் இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால், இந்த இறக்குமதி மணலை எடுத்துச் செல்ல தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அனுமதி அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.
இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் மணலை முறைப்படுத்தி விற்பனை செய்ய அனுமதிக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், நவம்பர் 6 ஆம் தேதிக்குள் பதிலளிக்கவேண்டும் என்று கூறி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அதுவரை துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள மணலுக்கு வாடகை வாங்க இடைக்காலத் தடை விதித்துள்ளது நீதிமன்றம்.
முன்னதாக, மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 54000 டன் மலேசிய மணல் தூத்துக்குடி துறைமுகத்திலேயே முடங்கிப் போய் இருப்பதாக செய்திகள் வெளியாயின. இதற்கு மணல் மாஃபியாக்கள் அட்டகாசம் ஒருபுறம் என்றால் அவர்களுக்குத் துணை போகும் கனிம வளத்துறை அதிகாரிகள் மறுபக்கம் என்கிறார்கள் தூத்துக்குடி மக்கள்.
தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக மலேசியாவில் இருந்து 54 ஆயிரம் டன் வீடுகட்டும் மணல், தூத்துக்குடி துறைமுகத்துக்கு கப்பலில் கொண்டுவரப்பட்டது. இந்த மணல் இப்போது, முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த மணலை கனிமவள அதிகாரிகள் துறைமுகத்தில் இருந்து வெளியில் எடுத்துச்செல்ல தடைவிதித்துள்ளனராம். இதற்கு உள்ளூர் மணல் மாஃபியாக்களின் நெருக்கடிதான் காரணம் என்கிறார்கள்.
தமிழகத்தின் எதிர்கால முக்கியப் பிரச்னையாக உணரப் படும் இந்தப் பிரச்னை குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் பேச முயன்றோம். அதற்கு அவர், இது கொள்கை ரீதியான முடிவு இதில் கருத்து சொல்ல இயலாது என்று கூறிய மாவட்ட ஆட்சியர், எந்த ஒரு பொருளையும் இறக்குமதி செய்வதில் சில கொள்கைகள், கட்டு திட்டங்கள் உள்ளன; அதனை இந்த விவகாரத்தில் சரியாகக் கடைப்பிடிக்கவில்லை என்றார்.
மேலும், துறைமுகத்துக்குள் தாவர நோய்த் தடுப்புப் பிரிவு, மற்றும் விலங்கு நோய்த் தடுப்புப் பிரிவு ஆகியவை உள்ளன. அதாவது எந்த ஒரு பொருளை இறக்குமதி செய்து கொண்டு வந்தாலும், வெளிநாடுகளில் இருந்து நம் நாட்டுக்குள் நோய்த் தொற்றுகள் அந்தப் பொருள்களின் மூலம் பரவாத வகையில் பாதுகாப்பது இவற்றின் நோக்கம். இந்த இரு பிரிவுகளின் ஒப்புகைச் சான்று இந்த மணலுக்கு இதுவரை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதை இதுவரை அளிக்காததால், மணல் வெளியேற தடை இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இது குறித்து விவரம் அறிய தூத்துக்குடி துறைமுக துணைத் தலைவர் நடராஜனைத் தொடர்பு கொள்ள முயன்றோம். தொடர்ந்து, துறைமுக போக்குவரத்துப் பிரிவு அதிகாரி ராஜேந்திரனிடம் இது குறித்துப் பேசினோம். அப்போது அவர், மாவட்ட ஆட்சியரிடம் இருந்து இது குறித்து ஒரு கடிதம் வந்ததாகக் கூறினார். மணல் சேமிப்பு, போக்குவரத்து ஆகியவற்றுக்கு குறிப்பிட்ட அந்த முகவர் மாநில அரசிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு மைனர் மினரல் கன்சஷன் விதி 1959ன் படி, அவர் அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால் அது பெறப்படவில்லை என்று ஆட்சியர் தெரிவித்திருப்பதாகக் கூறிய அவர், இன்னொரு தகவலையும் பகிர்ந்து கொண்டார். ஏற்கெனவே அண்டை மாநிலமான கேரளத்தில் கொச்சின் துறைமுகத்தில் இது போல் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல் தடுத்து நிறுத்தப் பட்டதாகவும், பின்னர் மாநில அரசின் கனிமவளத் துறை அனுமதியுடன் அடுத்த இரு கப்பல்கள் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறினார்.
இந்நிலையில்தான், மலேசியாவிலிருந்து தூத்துக்குடிக்கு இறக்குமதி செய்யப்பட்ட மணலை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்க அனுமதி கோரி வழக்கு.தொடரப்பட்டது.