இல்லம் தேடி கல்வி… வெளியானது தன்னார்வலர்களைத் தேர்வு செய்யும் வழிகாட்டுதல்கள்!! | illamthedikalvi

By Narendran SFirst Published Nov 10, 2021, 4:36 PM IST
Highlights

இல்லம் தேடி கல்வி திட்டத்தில்  தன்னார்வலர்களைத் தேர்வு செய்வதற்கான வழிகாட்டுதல்கள்  பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் கல்வி பாதித்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில் இணைய வழியிலும் தொலைக்காட்சி வாயிலாகவும் பாடங்கள் நடத்தப்பட்டன. ஆனால் அனைவரும் இந்த திட்டத்தில் பயனடைய முடியாத நிலை ஏற்பட்டது. இணைய வசதி, செல்போன் இல்லை, தொலைக்காட்சி இல்லை என்று கூறி பலர் பாடங்களை கற்பதில் சிக்கல் நீடித்தது. இந்த நிலையில் பெருந்தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டதன் காரணமாக, மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை ஆய்வு செய்த கல்வியாளர்களும், யுனெஸ்கோ உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகளும், தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆலோசனைக் குழுவிலுள்ள வல்லுநர்களும் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை மூலமாக, முழுவதும் மாநில அரசின் நிதியில் தேடிக் கல்வி என்ற திட்டம் செயல்படுத்த  முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டம் கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி தொடங்கப்பட்டது. அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

இல்லம் தேடிக் கல்வித் திட்டம் மாணவர்களிடையேயும், ஆசிரியர்களிடையேயும், கல்வியாளர்களிடையேயும் சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகிறது. பள்ளிகள் பல மாதங்களாக மூடப்பட்டிருந்த நிலையில் ஏற்பட்டுள்ள கற்றல் பாதிப்பினைக் குறைக்கவும், சரிசெய்யவும், வேறு எந்த மாநிலமும், எந்தவொரு திட்டத்தினையும் செயல்படுத்தாத நிலையில், ஒரு முன்னோடித் திட்டமாக மாணவச் செல்வங்களும், அவர் தம் பெற்றோர்களும் எளிதில் அணுகிப் பெறும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டு மாணவர்களின் கல்வியினை மேம்படுத்துவதில் ஆர்வம் கொண்டவர்களைத் தன்னார்வலர்களாகத் தேர்வு செய்து, அவர்களுக்கு உரிய பயிற்சி வழங்கி இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கான தன்னார்வலர்களை தேர்வு செய்யும் போது சாதி, மத பின்புலத்தை ஆராய்ந்து தேர்வு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது. மேலும் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை மூலமாக மாநில அரசின் நிதியில் செயல்படும் வகையில் இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் பள்ளிகள் பல மாதங்களாக மூடப்பட்டிருந்த நிலையில் கற்றல் பாதிப்பினை குறைக்கவும், சரி செய்யவும், வேறு எந்த மாநிலமும் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தாத நிலையில் ஒரு முன்னோடி திட்டமாக மாணவர்களுக்கு பெற்றோர்களும் எளிதில் அணுகும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இல்லம் தேடி கல்வி திட்டத்தில்  தன்னார்வலர்களைத் தேர்வு செய்வதற்கான வழிகாட்டுதல்கள்  பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.  அதில், பள்ளிகள் வாயிலாக தேர்வு செய்யப்படும் தன்னார்வலர்களின் தகுதியை, ஒன்றிய / மாவட்ட அளவிலான குழுக்கள் சரிபார்த்தல் அவசியம், தேர்வு செய்யப்படும் தன்னார்வலர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும், சாதி, மத பின்புலத்தை ஆராய்ந்து தேர்வு செய்ய வேண்டும், எந்த சாதிக்கும், மதத்துக்கும் சார்பாக பணியாற்றுவோரைத் தேர்வு செய்தல் கூடாது, அத்துடன் குழந்தைகளை கையாளும் திறனறி தேர்வு நடத்தப்பட வேண்டும், விருப்பு, வெறுப்புக்கு அப்பாற்பட்டவராக இருத்தல் அவசியம், பெண்களுக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும், கல்விச் சான்றிதழ்களை சரிபார்த்த பின்னர் தேர்வு செய்ய வேண்டும், இணையதளங்களில் பதிவு செய்தவர்களை தேர்வு செய்யும் பொறுப்பு பள்ளி மேலாண்மைக் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

click me!