அதிமுக ஆட்சி டெண்டர்களில் முறைகேடு என்றால் ரத்துதான்.. உள்ளாட்சித் துறையில் கிடுக்கிப்பிடி போடும் திமுக அரசு.!

By Asianet TamilFirst Published Jul 21, 2021, 9:26 PM IST
Highlights

அதிமுக ஆட்சியில் முறைகேடாக டெண்டர்கள் போடப்பட்டது கண்டறியப்பட்டால் அவை ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
 

சென்னை தலைமைச் செயலகத்தில், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் குடிநீர் வடிகால் வாரிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இப்பணிகளை விரைவாக முடிப்பது குறித்தும் தொடங்கப்படள்ள பணிகளில் ஏற்படும் தாமதங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதேபோல பாதாளச் சாக்கடை திட்டங்கள், குடிநீர் வழங்கல் திட்டம், ஸ்மார்ட் சிட்டி போன்ற திட்டங்களை விரைவாக முடிக்கவும் அதற்கான ஆய்வை மேற்கொள்ளவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 
துறை வாரியாக வரும் புகார்கள் மீதும் விரைவாக நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது, இந்த துறையில் நடந்துள்ள ஊழல் குறித்து ஆளுநர் மற்றும் நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணை நடைபெற்றுவருகிறது. தவறு செய்தது தெரிய வந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆட்சியில் முறைகேடாக டெண்டர்கள் போடப்பட்டது கண்டறியப்பட்டால் அவை ரத்து செய்யப்படும். 
ஏற்கனவே சென்னையில் ரூ. 120 கோடி மதிப்பிலான டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலையொட்டி, மாநகராட்சி மக்கள் தொகைக்கு ஏற்ப வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. புதிய மாநகராட்சி, நகராட்சி உருவாக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளோம். அப்படி உருவாக்கப்பட்டால் இதில் மாற்றங்கள் ஏற்படும். இதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
ஊரக பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் அப்படியே இருக்கும். புதிதாகத் தேர்வு செய்யப்படுபவர்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பணி செய்வார்கள். தேர்தல் மாறிமாறிதான் நடைபெறும். புதிதாக எத்தனை மாநகராட்சிகள், நகராட்சிகள் உருவாக்கப்படும் என்பதை முதல்வர் அறிவிப்பார்” என்று கே.என். நேரு தெரிவித்தார்.

click me!