டாஸ்மாக் கடைகளை மூடினால் தமிழ்நாட்டுக்கு ஒரு லட்சம் கோடி உறுதி..!! அரசுக்கு வந்த அசத்தல் யோசனை..!!

By Ezhilarasan BabuFirst Published Apr 30, 2020, 1:19 PM IST
Highlights

தமிழகத்தில் கள் விற்பனையை ஊக்கப்படுத்த வேண்டும் பனைமரம் தென்னைமரம் வைத்துள்ள விவசாயிகளை ஊக்கப்படுத்தி அவர்களிடமிருந்து கள் கொள்முதல் செய்தால், அதை நல்ல விலைக்கு விற்பனை முடியும்

டாஸ்மாக் கடைகள் இல்லாமல் தங்களால் இருக்க முடியும் என்பதை கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழக குடிமகன்கள் நிரூபித்துக் காட்டியுள்ளனர்  எனவே தமிழகத்தில் இனி டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டாம் என தமிழகம் முழுவதிலுமிருந்து  கோரிக்கை குரல்கள் எழுந்துள்ளன.  இதனால் அரசுக்கு வருமான இழப்பு ஏற்படும் என்றால் அதற்கும் பல மாற்று வழிகள் இருக்கிறது என பல ஆலோசனைகள் வந்துள்ளன ,  டாஸ்மாக் கடைகளுக்கு 100 முதல் 150 ரூபாய் செலவழிப்பதற்கு மாற்றாக  தினம் அரசாங்கத்திற்கு 10 ரூபாய் என கொடுத்து விடுகிறோம் டாஸ்மாக் கடைகள் இனி வேண்டவே வேண்டாமென பல பெண்கள் கையெடுத்து கும்பிடு கின்றனர் . தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் அதிகமான மதுபான கடைகள் உள்ளன ,  அதில் 700 க்கும் மேற்பட்ட கடைகள் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அமைந்துள்ளன . இதில் ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய்  வருமானம் ஈட்டப்படுகிறது ,  கடந்த 2018 -19 ஆம் நிதியாண்டில்  31, 157 .83 கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டது ,  2019-20 ஆம்  நிதியாண்டில் சுமார் 31 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்துள்ளது.  ஆகவே கடந்த இரண்டு ஆண்டுகளாக டாஸ்மாக்கில் சீரான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. 

டாஸ்மாக்கில் கிடைக்கும் வருவாயை வைத்துதான் அரசு இயங்குகிறது என்ற அளவிற்கு தமிழகத்தின் செல்வம் கொழிக்கும் அட்சயபாத்திரமாக உள்ளது டாஸ்மாக்  இந்நிலையில் கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவால் டாஸ்மாக் கடைகள் முற்றுலுமாக மூடப்பட்டுள்ளன . கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மூடப்பட்டுள்ளதால் கிட்டத்தட்ட 3 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது .  கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்ட மார்ச் 24ஆம் தேதி மட்டும் வெரும் 6 மணி நேரத்தில் 210 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில் கிட்டத்தட்ட நாற்பது நாட்களை கடந்து விட்ட நிலையில் டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடிவிடவேண்டும் என தமிழகம் முழுவதிலும் இருந்து கோரிக்கைகள் எழத் தொடங்கியுள்ளன.   டாஸ்மாக் கடைகளை மூடுவதாக அரசு முடிவெடுத்தால் தங்களின் தாலி காப்பாற்றப்படும்  என  பெண்கள் அரசுக்கு கண்ணீர் கோரிக்கை வைக்கின்றனர்.   இந்நிலையில் மதுபானத்திற்கு மாற்றாக " கள் ' விற்பனையை ஊக்கப்படுத்தினால் டாஸ்மார்க் கடைகளில் இருந்து கிடைக்கும் 30 ஆயிரம் கோடி என்ன,  ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வருமானம் ஈட்டலாம் எனவும் பல ஆலோசனைகளை எழுந்துள்ளன.  அந்த வகையில் இது குறித்து தெரிவித்துள்ள

கோவை மனுநீதி  அறக்கட்டளை தலைவர் மனுநீதி மாணிக்கம்  விவரமாக விளக்கியுள்ளார்,  அதாவது டாஸ்மாக்கை மூடிவிட்டால் வருமானம் போய்விடும் என அரசு அஞ்சத்தேவையில்லை ,  சுதந்திரத்திற்கு பின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற காமராஜர் காலத்தில் அரசுக்கு எந்த வருமானமும் இல்லை,  ஆனால் பணம் இல்லை என்பதற்காக அவர் எந்த திட்டத்தையும் கைவிடவில்லை , வாய்க்கால் வெட்டுவது முதல்  டேம் கட்டுவது வரை  அத்தனை திட்டத்தையும் செய்து முடித்தார்,  தமிழகத்தில் முதன் முதலில் பவானிசாகர் அணையை எந்த வருமானமும் இல்லாமல்தான் அவர் கட்டினார் .  தமிழகத்திலுள்ள பல முக்கிய செல்வந்தர்களிடம் இருந்து நிதி பெற்று திட்டங்களை எல்லாம் செய்து முடித்தார் . டாஸ்மாக்கை மூடுவதன் மூலம் ஏற்படும் 30 ஆயிரம் கோடி இழப்பை ஈடுகட்டுவது பெரிய காரியமல்ல ,  பலவகைகளில் அதை ஈட்டமுடியும், மிகப்பெரும் செல்வந்தர்களை பட்டியலிட்டு அவர்களிடம் இருந்து  ஒருவருக்கு ஆண்டுக்கு 3 லட்சம் என பத்து லட்சம் பேரிடம் வசூலித்தால் 30 ஆயிரம் கோடியை எட்டிவிட முடியும்  என்கிறார் மாணிக்கம்.இது மட்டுமல்ல 10 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் வெளிநாட்டில் வேலை செய்கின்றனர் ,  அவர்கள் மூலமாக நிதி திரட்டினால் போதும் இதை சமாளித்து விடாலம்,  அதுவும் இல்லை என்றால் டாஸ்மாக் கடைகளால் பாதிக்கப்படும் சுமார் 3 கோடி தொழிலாளர்களிடம் தலா 10 ரூபாய் என வாங்கினால் கூட இந்தத் தொகையை ஈடு செய்துவிடலாம் .

 

இதனால் அவர்கள் குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும் அவர்களின் குடும்ப பாதுகாப்பு உறுதி செய்யப்படும்  என்கிறார் ,  இதை எங்களது அறக்கட்டளை மூலமாக கூட செய்ய தயாராக இருக்கிறோம் என்கிறார் மாணிக்கம். இந்த மோசமான மதுபானங்களை அருந்துவதைவிட அதற்கு மாற்றாக சங்ககாலத்தில் ஆயுர்வேத பானம் என குறிப்பிடப்பட்டிருக்கும் "கள் " அருந்துவதன் மூலம்  உடலுக்கு  நன்மை பயக்கும் ,  பல நோய்களை தீர்க்கும் பானம் என இதை தமிழர்கள் பயன்படுத்தியுள்ளனர். ஆனால்  போதைப்பொருள் என " கள் "ளை தடை செய்துவிட்டு அதற்கு மாற்றாக அதிக போதை தரும் மதுபானத்தை விற்பனை செய்வது என்ன நியாயம் எனக் கேட்கும் அவர் ,  தமிழகத்தில் கள் விற்பனையை ஊக்கப்படுத்த வேண்டும் பனைமரம் தென்னைமரம் வைத்துள்ள விவசாயிகளை ஊக்கப்படுத்தி  அவர்களிடமிருந்து கள் கொள்முதல் செய்தால், அதை நல்ல விலைக்கு விற்பனை முடியும்,  பெப்சி , கோக் என குளிர்பானங்களை  லிட்டர் 40 ரூபாய் 50 ரூபாய் என விலைகொடுத்து வாங்கி குடிக்கும் நாம், ஒரு லிட்டர் "கள் " மற்றும் பதநீர்   20 ரூபாய் என வாங்கினால் போதும் ,  இதனால் வருடத்திற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் அரசு வருமானம் ஈட்ட  முடியுமென அவர் தெரிவிக்கிறார்.   இந்த பொறுப்பை மனுநீதி அறக்கட்டளை ஏற்க தயாராக இருக்கிறது என அதன் தலைவர் மாணிக்கம் தெரிவிக்கிறார் , 

இனியும் இந்த சமுதாயத்தை காப்பாற்ற வேண்டும் என நினைத்தால் ஆட்சியாளர்கள் உடனே டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடி மாற்று வழிகளில் ஈடுபட வேண்டும் . இந்த முடிவை எடுத்தால்  தமிழகம் முழுவதுமுள்ள தாய்மார்கள் ஆட்சியாளர்களுக்கு நன்றி கடன் பட்டவர்களாக இருப்பர் என்கிறார்.  கொரோனாவால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ,  கொரோனா ஏற்படுத்தியுள்ள  ஒரே நன்மை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதுதான்.  இது தான் சரியான நேரம் இப்போதே டாஸ்மாக் கடைகளை மூட அரசு  முடிவை எடுக்க வேண்டும் என மாணிக்கம் கோரிக்கை வைத்துள்ளார்.  இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பல்வேறு குடிமகன்கள் டாஸ்மாக்  இல்லாமல் வாழ முடியும் என்பதை கொரோனா எங்களுக்கு கற்றுக் கொடுத்துவிட்டது ,  இனி தயவுசெய்து டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டாம்... இத்தனை நாட்களாக மது அருந்தாமல் இருப்பதால் உடல் நல்ல நிலையில் உள்ளது ,  நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் 150 ரூபாய் என டாஸ்மாக் கடைகளுக்கு செலவு செய்வதைவிட தினம் பத்து ரூபாய் அரசுக்கு கொடுத்து விடுகிறோம் இனி கடைகளைத் திறக்க வேண்டாம் என கையெடுத்து கும்பிடு கின்றனர். 

 

click me!