மோடியும் ரஜினியும் சேர்ந்தால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம்... ஆடிட்டர் குருமூர்த்தி தாறுமாறு கணிப்பு..!

By Asianet TamilFirst Published Dec 4, 2020, 8:28 AM IST
Highlights

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் முதல்வர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்திக் கொள்ளவேண்டும் என்று துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
 

ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பு குறித்து குருமூர்த்தி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “கடந்த 25 ஆண்டுகளாக தமிழகத்தில் ஒரு சாபம் உள்ளது. சமுதாயத்துக்கும் அரசியல் போக்குக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இதுபோன்ற சூழலில் நடிகர் ரஜினியின் அறிவிப்பு முக்கியத்துவம் மிக்கதாக பார்க்கிறேன். தமிழகத்தில் இரண்டு பெரும் தலைவர்கள் இருந்ததால், அவர்கள் கட்சி செய்யும் தவறு வெளியே தெரியாமல் போனது. தற்போது இரண்டு கட்சித் தலைவர்களும் இல்லாததால், தற்போது கட்சிகளுக்கு இடையே போட்டி உருவாகியுள்ளது.

 
ரஜினிகாந்தை சினிமா நடிகராக யாரும் பார்க்கவில்லை. அவரை ஒரு நல்லவராகப் பார்க்கிறார்கள். ரஜினியும் மோடியும் சேர்ந்தால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உருவாகும் என்பது என்னுடைய நிலைப்பாடு. ஆனால், அதுதான் ரஜினி நிலைப்பாடா என்று எனக்குத் தெரியாது. ரஜினியின் அறிவிப்பு மூலம் தற்போது தலைவர்கள் மட்டத்தில் நிறைய மாற்றங்கள் வரும். வரக்கூடிய தேர்தலில் எந்தெந்த கட்சிகள் மீது தாக்கம் அதிகமாக உள்ளதோ அந்தந்த கட்சிகள் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளும் நிலை வரும்.  அது கடைசி நாளில் கூட நடைபெற வாய்ப்புள்ளது.


ரஜினிகாந்த் முதல்வர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்திக் கொள்ளவேண்டும் என்பது என்னுடைய நிலைப்பாடு. எல்லோரும் விரும்பினால் முதல்வர் வேட்பாளர் என்ற நிலையை நடிகர் ரஜினி எடுப்பார். ஒருவேளை முதல்வர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்தவில்லை என்றாலும், காந்தி பிரதமர் ஆகவில்லை என்பதைப் போல மக்கள் புரிந்துகொள்வார்கள் என்றே நம்புகிறேன். ரஜினியின் இந்த மாற்றம் வெற்றியை நோக்கி செல்லும். ஆனால், ரஜினி மட்டுமே அதைச் செய்யப் போகிறாரா அல்லது கூட்டணியாக செய்யப் போகிறாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


ரஜினிகாந்த் குறித்து அமித்ஷா என்னிடம் கேட்டார். ரஜினி முடிவு செய்தால் மட்டுமே எதையும் சொல்ல முடியும் என்று சொன்னேன். நடிகர் ரஜினிகாந்த் இதை செய்ய வேண்டும், அதை செய்ய வேண்டும் என்று நான் ஒருபோதும் அவரிடம் கூறியதில்லை.” என்று குருமூர்த்தி தெரிவித்தார். 

click me!