தப்பித் தவறி அதிமுக வெற்றி பெற்றிருந்தால் எச்.ராஜாதான் முதலமைச்சர்.. உடைத்து பேசிய திருமாவளவன்.

By Ezhilarasan BabuFirst Published Nov 24, 2021, 12:29 PM IST
Highlights

தமிழகத்தின் பாஜகவுக்கும் விடுதலை சிறுத்தைகளுக்கும் ஏழாம் பொருத்தம் பொறுத்தம் என்றே சொல்லலாம். பாஜக திமுகவை எதிர்க்க முனையும் போதெல்லாம் விடுதலை சிறுத்தைகள் பாஜகவை தடுக்கும் கேடயமாக இருந்து வருகிறது. 

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றிருந்தால் எச்.ராஜா தான் முதலமைச்சராக இருந்திருப்பார் என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் விமர்சித்துள்ளார். 2024 இல் பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்து விட்டால் நிச்சயம் நாட்டின் பெயர் மாற்றப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தின் பாஜகவுக்கும் விடுதலை சிறுத்தைகளுக்கும் ஏழாம் பொருத்தம் பொறுத்தம் என்றே சொல்லலாம். பாஜக திமுகவை எதிர்க்க முனையும் போதெல்லாம் விடுதலை சிறுத்தைகள் பாஜகவை தடுக்கும் கேடயமாக இருந்து வருகிறது.  குறிப்பாக விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் கோயில்களை குறித்தும், அங்குள்ள சிலைகளை குறித்தும் பேசிய பேச்சு பாஜகவினரை கொதிப்படையச் செய்தது. அதைத்தொடர்ந்து மனு சாஸ்திர நூலில் பெண்களை மிக மோசமானவர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியதை, அய்யோ திருமாவளவன் பெண்களை கொச்சைப்படுத்திவிட்டார், திருமாவளவன் பெண்களுக்கு எதிராக பேசிவிட்டார் எனக்கூறி பாஜக அவருக்கு எதிராக போராட்டத்தை நடத்தியது. இதில் ஒருபடி மேலேபோய் திருமாவளவனுக்கு தைரியம் இருந்தால் மெரினா கடற்கரைக்கு வந்து அங்கு இந்துக்களை பற்றி தவறாக பேசட்டும் என காயத்ரி ரகுராம் போன்றவர்கள் சவால் விடுத்திருந்தனர். அதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த மகளிர் அமைப்பினர் காயத்ரி ரகுராம் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதைத்தொடர்ந்து திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சியை அவதூறாக பேசிய விவகாரத்தில் காயத்ரி ரகுராமின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது. அதேபோல பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவரான எச். ராஜா தொடர்ந்து விடுதலை சிறுத்தைகளையும், அதன் தலைவர் தொல்.திருமாவளவனையும் விமர்சித்து பேசி வருகிறார். சரக்கு, மிடுக்கு திருமாவளவன்... சமூக விரோதி திருமாவளவன் என அவர் மேடைதோறும் அவரை தாக்கி வருகிறார். பாஜக எந்த அளவிற்கு திமுகவை எதிர்க்கிறது அதே அளவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியையும் அதன் தலைவர் தொல். திருமாவளவனையும் விமர்சித்து வருகிறது. அதேபோல அரசியலில் எந்த கட்சி தலைவர்களும் இல்லாத அளவுக்கு எச்.ராஜாவின் பேச்சுக்கள் தொடர்ந்து தமிழக அரசியல் களத்தில் அறுவெறுப்பாகவும், வன்முறையை தூண்டும் வகையிலும் இருந்து வருகிறது. குறிப்பாக கவிஞர் வைரமுத்து மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து கொச்சையாக பேசியது, உயர்நீதிமன்றத்தை பற்றி தரக்குறைவாக பேசியது, நீட்டுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை பற்றி மிக கொச்சையாக பேசுவது உள்ளிட்ட பேச்சுக்கள் தொடர்ந்து  தமிழக மக்களால் கடுமையாக எதிர்ப்பு கப்பட்டு வருகிறது.

அவர் பேசிய வெறுப்பு பேச்சுக்களில் வீடியோ தொகுப்பு ஒன்று கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது வைரலானது. அதேபோல் தங்களை விமர்சிப்பவர்கள் அனைவரையும் மதக் சாயம் பூசி அவர்களை விமர்சிப்பதில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது என்ற விமர்சனம் அக்கட்சியின் மீதும் குறிப்பாக எச். ராஜா மீது இருந்து வருகிறது. நடிகர் விஜய்க்கு எதிராக அவரது வாக்காளர் அடையாள அட்டையையும்,  பழைய லெட்டர் பேடு ஒன்றையும் வெளியிட்டு விஜய் சாதாரண விஜய் அல்ல அவர் ஜோசப் விஜய் அவர் ஒரு கிறிஸ்தவர் அதனால்தான் மத்திய அரசை அவர் குறிவைத்து விமர்சித்து வருகிறார் என கூறினார். நடிகர் விஜயை மத அடையாளப்படுத்தி பேசிய எச். ராஜாவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. மத்திய அரசை விமர்சிப்பவர்களை மாற்று மதத்தினர் என முத்திரை குத்தி அரசியல் ஆதாயம் தேடுவது மிக கேவலமான ஒன்று என தமிழக மக்கள் எச். ராஜாவுக்கு எதிராக கொந்தளித்தனர். தொடர்ந்து தமிழர் விரோதப் போக்கின் காரணமாக தமிழர்களிடம் இருந்து பாஜக அன்னியப்பட்டிருக்கும்போது எச். ராஜா போன்றவர்களின் பேச்சு நிச்சயம் பாஜகவை தமிழகத்தில் காலூன்ற விடாது  என்ற கருத்தும் அவருக்கு எதிராக எழுந்தது. 

அதேபோல் செல்வி ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு முழுவதுமாக பாஜகவின் கைப்பாவையாக செயல்பட்டதாக விமர்சனம் இருந்து வருகிறது. அதிமுகவை வைத்து தங்கள் கொள்கைகள், சித்தாந்தங்கள் மற்றும் தங்களது திட்டங்களை சாதித்துக் கொள்ளும் முயற்சியில் பாஜக செயல்பட்டு வந்ததாகவும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எச். ராஜாவையும், பாஜகவை விமர்சித்து கருத்து ஒன்று தெரிவித்துள்ளார் . அது பேசுபொருளாக மாறியுள்ளது. திரிபுரா மாநிலத்தில் இடதுசாரிகள் மற்றும் இஸ்லாமியர்கள் மீது பாஜக நடத்திய வன்முறையை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று மதச்சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து கண்டன ஆர்ப்பாட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற்றது. அதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் கலந்து கொண்டன. அப்போது பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன். 

விரைவில் திரிபுரா நிலை தமிழகத்திலும் ஏற்பட உள்ளது. காங் இல்லாத, இடதுசாரி இல்லாத இந்தியா, கழகங்கள் இல்லாத தமிழகம் என்பதுதான் சங்பரிவார் அமைப்புகளின் நிலைப்பாடு என்றும் தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்த நிலையில் அந்தக் கூட்டணி வெற்றி பெற்றிருந்தால் தமிழகத்தின் முதலமைச்சராக எச்.ராஜா அவர்களே இருந்திருப்பார் என்றும் தெரிவித்தார். பாஜக மக்கள் விரோத நடவடிக்கைகளால் எதிர்கட்சி எதிர்ப்பை பொருட்படுத்தாமல் கொண்டு வந்த சட்டம் அனைத்தையும் திரும்ப பெற வேண்டும் என்றும், 2024 பாஜக மீண்டும் வந்து விட்டால் நாட்டின் பெயர் மாற்றப்படும். நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார். இந்த ஆர்ப்பாட்டம் சனாதன நச்சு அரசியலுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் என்றும், சங்பரிவார் அமைப்புகள் எதிரான நடவடிக்கை தொடரும் என அவர் தெரிவித்தார்.

 
 

click me!