பெண்களுக்கு ரூ.1000 வழங்காவிட்டால்... அதிமுகவுக்கு நானே வாக்களிக்கிறேன்.. ஆ. ராசா பகிரங்க அறிவிப்பு.!

By Asianet TamilFirst Published May 14, 2022, 9:37 PM IST
Highlights

 குடியரசுத் தலைவருக்கு மசோதாவை முதல்வர் அனுப்ப வைத்திருக்கிறார். இதுதான் திராவிட மாடலுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம்.

நீட் விவகாரத்தில் ஆளுநர் வைத்த தேநீர் விருந்தை புறக்கணித்து முதல்வர் ஸ்டாலின் ஆளுநரை பணிய வைத்தார் என்று திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. தெரிவித்துள்ளார். 

திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் திமுக இளைஞரணி சார்பில் சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக துணைப் பொதுச்செயலாளருமான ஆ. ராசா பங்கேற்று பேசினார். “ ஆட்சிக்கு வந்தால் நீட்டை ரத்து செய்வேன் என்று ஸ்டாலின் சொன்னாரே என்று எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் ஆகியோர் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். நீட் மசோதாவை தமிழக ஆளுநர் நிராகரித்தார். மீண்டும் அதை தமிழக ஆளுநருக்கு முதல்வர் அனுப்பி வைத்தார்.

சட்டப்படி இரண்டாவது முறையாக அனுப்பும் மசோதாவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும். இந்த விவகாரத்தில் ஒரு மாதம், இரு மாதங்கள், 3 மாதங்கள் என மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் வைத்திருந்தார். ஆளுநர் வைத்த தேநீர் விருந்தை புறக்கணித்து முதல்வர் ஸ்டாலின் ஆளுநரை பணிய வைத்தார். குடியரசுத் தலைவருக்கு மசோதாவை முதல்வர் அனுப்ப வைத்திருக்கிறார். இதுதான் திராவிட மாடலுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம். பெண்களுக்கு உரிமைத் தொகை தருவதாக கூறினார்களே தந்தார்களா? என்றும் கேட்கிறார்கள். இந்த இரண்டும்தான் பிரச்சினை.

ஐந்து ஆண்டு கழித்து தேர்தல் நடக்கும்போது திமுக தேர்தல் அறிக்கையை கையில் வைத்துக் கொண்டு, ‘முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு ரூ.1000 தருகிறேன் என்று சொன்னார். ஆனால், தரவில்லை. அதனால் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்று எடப்பாடி கேட்கட்டும். அப்போது நானே இரட்டை இலைக்கு வாக்களிக்கிறேன்” என்று ஆ. ராசா பேசினார். 

click me!