அரசியலுக்கு இடைஞ்சல் ஏற்பட்டால் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிடுவேன்... கமல்ஹாசன் அதிரடி அறிவிப்பு..!

By Asianet TamilFirst Published Apr 4, 2021, 8:50 PM IST
Highlights

சினிமா எனது அரசியலுக்கு இடைஞ்சலாக இருந்தால், அதை நிறுத்திவிடுவேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்  தெரிவித்துள்ளார். 
 

தீவிர தேர்தல் பிரசாரத்துக்கு இடையே கோவையில்  கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தேர்தலையொட்டி ஊடகங்களை, குறிப்பாக எதிர்க்கட்சி ஊடகங்களை நாங்கள் சாதகமாகப் பயன்படுத்த வேண்டிய சூழல் இருந்தது. இந்த விஷயத்தில் எந்த சூழ்ச்சியும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இது எல்லோருக்குமான ஜனநாயகம். எனவே, இதை நான் பயன்படுத்திக் கொள்கிறேன். அரசியலுக்கு வந்ததற்கான காரணத்தை ஏற்கனவே பலமுறை நான் சொல்லிவிட்டேன். 
வரலாறு என்னை இங்கே களத்தில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. என்னைப் பொறுத்தவரை என் வேலை உண்டு; எனது கலை உண்டு என்றுதான் இருந்தேன். எனது தேவை அரசியலுக்குத் தேவையா என யோசித்துப் பார்க்காமலேயே இருந்தது என்னுடைய தவறுதான். அதே தவறைப் பலரும் செய்துள்ளார்கள். அரசியல் வருகையை முன்பே செய்திருக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தாலும், தற்போதாவது அரசியலுக்குள் வந்தேனே என்பதை நினைத்து மகிழ்ச்சிதான்.
அரசியலில் எனக்கு மிரட்டல்கள் வந்தன. ஆனால், அதற்கெல்லாம் எனக்கு எந்தப் பயமும் கிடையாது. அனைத்துக்கும் தயாராகத்தான் இங்கே வந்திருக்கிறேன். மிரட்டலுக்கெல்லாம் இங்கு இடம் கிடையாது. என்னுடைய வாழ்க்கையின் எஞ்சிய நாட்களை மக்களுக்காக என முடிவு செய்துவிட்டேன். அரசியலுக்கு வந்துவிட்ட நிலையில், சினிமாவில் ஏன் நடிக்கிறேன் என்றால், அது என்னுடைய தொழில். பிறர் தயவில் வாழக் கூடாது என்பதற்காகத் தொடர்ந்து அந்த வேலையைச் செய்வேன். அதே நேரம் சினிமா எனது அரசியலுக்கு இடைஞ்சலாக இருந்தால், அதை நிறுத்திவிடுவேன்” என்று கமல்ஹாசன்  தெரிவித்தார். 

click me!