அரசியலில் நிரந்தர நண்பனுமில்லை, நிரந்தர எதிரியுமில்லை! எனும் லாஜிக்கை சொல்லிக் கொண்டு கூடிக் குழாவுவதும், வெட்டிப் பிரிவதும் கரைவேட்டிகளின் வழக்கம்.
ஒரு காலத்தில் மிக நெருக்கமாக இருந்த பா.ம.க.வின் டாக்டர் ராமதாஸும், விடுதலை சிறுத்தைகள் திருமாவளவனும் கடந்த சில வருடங்களாக அநியாயத்துக்கு பிரிந்து கிடக்கின்றனர்.
பொதுவாக சில அரசியல்வாதிகளுக்குள் வேற்றுமை உருவாவதற்கு பர்ஷனல் மோதல்கள் காரணமாக அமையலாம். ஆனால் இவர்கள் இருவரைப் பொறுத்தவரையில் இவர்கள் சார்ந்த சமுதாயங்களுக்குள் நடக்கும் மோதலே இவர்களை தொடர்ந்து பிரித்து வைத்திருக்கிறது.
ராமதாஸ் சார்ந்த சமுதாயமானது தொடர்ந்து தங்களை அடக்க முயற்சிப்பதாக திருமாவளவன் சமுதாயமும், இவர் சார்ந்த சமுதாயம் தங்கள் சமுதாய பெண்களை நாடகமாடி துன்புறுத்துவதாகவும் தொடர்ந்து சர்ச்சைகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
இவர் இருக்கும் கூட்டணியில் அவரும், அவர் இருக்கும் கூட்டணியில் இவரும் இருப்பதில்லை எனும் முடிவில் இருப்பது தனிக்கதை. முன்பு ஒன்றாக இருந்தபோது ராமதாஸின் தைலாபுரம் தோட்டத்திற்கு நட்பு அடிப்படையில் சென்றிருக்கிறார் திருமா.
இந்த சூழலில், தைலாபுரம் தோட்டத்திற்கு சென்று நிற்கும் சூழல் வந்தால் என்ன செய்வீர்கள்? என்று இப்போது திருமாவளவனிடம் கேட்டபோது ‘அந்த இடத்துல தூக்குப்போட்டு செத்துடுவேன் நான்’ என்று ஆவேசத்துடன் சொல்லியிருக்கிறார் திருமாவளவன்.
இதற்கு ராமதாஸின் அதிரடி பதிலடி எப்படி இருக்கப்போகிறதோ!........