
ஜெயலலிதா மரணம்- விசாரணை
ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுக சாமி ஆணையம் 2 ஆண்டுகளுக்கு பிறகு தனது விசாரணையை கடந்த வாரம் துவக்கியது, இதில் அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்களிடம் விசாரணை நடைபெற்றது. இதனை தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சம்மன் அனுப்பி இருந்த நிலையில் நேற்றைய தினம் அவர் ஆஜர் ஆகி இருந்தார். அப்போது சசிகலா அண்ணன் மனைவி இளவரசி மற்றும் அவரது மகன் விவேக் ஆகியோரும் விசாரணைக்கு நேரில் ஆஜர் ஆகி இருந்தனர். ஓ.பன்னீர்செல்வத்திடன், நேற்று மொத்தம் மூன்றரை மணி நேரம் விசாரணை நடைபெற்றது. அப்போது நீதிபதி ஆறுமுகசாமி மற்றும் ஆணைய வழக்கறிஞர்கள் கேட்ட சுமார் 78 கேள்விகளுக்கு அவர் விளக்கம் அளித்தார். இதனையடுத்து இன்றும் விசாரணையில் ஆஜராகும்படி கேட்டுக்கொண்டார்.
ஓ.பன்னீர் செல்வம் பதில்
இதனையடுத்து இன்று ஆஜர் ஆன ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்தார், அதில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற மூன்று தொகுதி இடைத்தேர்தலுக்கும் வேட்பாளரை தேர்வு செய்தது ஜெயலலிதா தான் என ஆறுமுகசாமி ஆணையத்தில் கூறினார்.. மேலும் இடைத்தேர்தல் தொடர்பான படிவங்களில் ஜெயலலிதா கைரேகை வைத்தது எனக்கு தெரியும் எனவும் மேலும் அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த போது ஒரு சில முறை அவர் நன்றாக இருப்பதாக சசிகலா என்னிடம் தெரிவித்ததாகவும், இதனை சக அமைச்சர்களிடம் மட்டுமே தெரிவித்ததாகவும் கூறினார். இதனையடுத்து சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்திடம் குறுக்கு விசாரணை நடத்தினார். அப்போது நடைபெற்ற உரையாடல்களை பார்க்கலாம்..
ராஜா செந்தூர்பாண்டியன்: சசிகலா மீதுள்ள குற்றாச்சாட்டை களைய வேண்டும் என்பதற்காக தான் ஆணையம் அமைக்கவேண்டும் என்று தனியார் தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டி சரிதானா.?
ஓ.பிஎஸ்: சரிதான்
ராஜா செந்தூர் பாண்டியன்: நான்கரை மணி நேரம் நடைபெற்ற விசாரணையில் பங்கேற்று வாக்குமூலம் அளித்துள்ள நிலையில் ஜெயலலிதா மரணத்தில் உங்களுக்கு ஏதும் தனிப்பட்ட முறையில் சந்தேகம் உள்ளதா ? -
ஓ.பி.எஸ் : ஜெயலலிதா மரணத்தில் தனிப்பட்ட முறையில் எந்த சந்தேகமும் இல்லை, பொதுமக்களின் கருத்து வலுத்ததால் தான், நான் இந்த கோரிக்கையை விடுத்தேன். அவரின் மரணத்தில் உள்ள சந்தேகங்களை ஆணையம் களைய வேண்டும் என்றார்.
ராஜா செந்தூர் பாண்டியன்: மரணம் குறித்து நீதி விசாரணை கேட்டதும், நீங்கள் தான், அரசாணை பிறப்பித்ததும் நீங்கள் தான், இப்போது விசாரணைக்கும் ஏன் வந்துள்ளீர்கள் ?
ஓ.பி.எஸ்: ஆணையம் பணித்ததால் வந்தேன் என்றார்.
ராஜா செந்தூர் பாண்டியன்: ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 22-09-2016 முதல் 05-12-2016 வரையிலான காலத்தில் அப்போலோ மருத்துவமனையில் என்னென்ன சிகிச்சை கொடுக்கப்பட்டது தொடர்பாக விசாரிக்க தான் ஆணையம் அமைக்கப்பட்டது சரிதானா?
ஓ.பி.எஸ்: சரிதான்.
சசிகலா மீது மரியாதையும் அபிமானமும்
ராஜாசெந்தூர் பாண்டியன் : சசிகலா மீது இப்போதும் தனிப்பட்ட முறையில் மரியாதையும் அபிமானமும் உள்ளதா ?
ஓ.பி.எஸ் : சசிகலா மீது தனிப்பட்ட முறையில் மரியாதையும் அபிமானமும் இன்று வரை உள்ளது.
ராஜா செந்தூர்பாண்டியன் : விசாரணை அமைக்கப்பட்ட முதல் யாரிடமெல்லாம் என்னென்ன விசாரணைகள் நடைபெற்றது என்பது குறித்து தெரியுமா ?
ஓ.பி.எஸ் : நான் பதில் சொன்னது அனைத்தும் பத்திரிகைகளில் முழுவதுமாக வந்துள்ளது. இதற்கு முன்பு, நடந்த விசாரணையில் முழுவதுமாக வரவில்லை.
இவ்வாறாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆறுமுகசாமி ஆணையம், அப்பல்லோ மருத்துவமனை, சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஓ.பன்னீர் செல்வமும் பதில் அளித்திருந்தார்.