மிசாவையே பார்த்த நான் இந்த ஐ.டி.ரெய்டுக்கு எல்லாம் அஞ்சமாட்டேன்... அசராமல் திருப்பி அடிக்கும் ஸ்டாலின்..!

Published : Apr 02, 2021, 12:23 PM IST
மிசாவையே பார்த்த நான் இந்த ஐ.டி.ரெய்டுக்கு எல்லாம் அஞ்சமாட்டேன்... அசராமல் திருப்பி அடிக்கும் ஸ்டாலின்..!

சுருக்கம்

திமுக தலைவர் ஸ்டாலினின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரி சோதனை நடந்துவருவதால், அந்த சலசலப்பிற்கு நாங்கள் அஞ்ச மாட்டோம் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலினின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரி சோதனை நடந்துவருவதால், அந்த சலசலப்பிற்கு நாங்கள் அஞ்ச மாட்டோம் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டமில் திமுக தலைவர் ஸ்டாலின், திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்;- இந்த ஜெயங்கொண்டம் தொகுதிக்கு வரும்போதெல்லாம் அனிதா என்னும் மாணவி தான் நியாபகம் வருகிறார். கல்வி உரிமைக்காக உயிரை தியாகம் செய்த ஒரே பெண் என்பதை மறுக்க முடியாது. தமிழகம் முழுவதும் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி என்ற அமைப்பை துவக்கி பெண்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிப்போம்.

எனது மகள் செந்தாமரை வீட்டில் 100 போலீஸ் பாதுகாப்போடு ரெய்டு நடத்தி வருகின்றனர். அதிமுகவை பாஜக அரசு காப்பாற்றி வருகிறது. ஏற்கனவே அமைச்சர்கள், தலைமை செயலர் வீட்டில் ரெய்டு நடத்தி மிரட்டி வைத்துள்ளனர். அவர்களுக்கு நான் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். இது திமுக. கருணாநிதியின் மகனான நான், சலசலப்பிற்கு அஞ்ச மாட்டேன். 

ரெய்டு போன்ற சலசலப்புக்கு எல்லாம் திமுக அஞ்சாது. அதிமுகவை மிரட்டுவது போல் திமுகவை மிரட்ட முடியாது. மிசாவையே பார்த்த நான் ஐ.டி. ரெய்டுக்கு எல்லாம் அஞ்சமாட்டேன். ஐ.டி. ரெய்டு மூலம் வீட்டுக்குள் திமுகவினரை முடக்கி வைக்க மத்திய அரசு திட்டமிடுகிறது. பாஜகவின் மிரட்டலுக்கெல்லாம் அதிமுக அஞ்சும், திமுக என்றும் அஞ்சாது. மீண்டும் மீண்டும் ரெய்டு செய்வதால் திமுக மேலும் கிளர்ந்து எழும்.  

தேர்தல் தேதி நெருங்கும் வேளையில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை பாஜக தொடங்கியுள்ளது. திமுகவின் வெற்றி முகத்தை தடுக்க குறுக்கு வழி அரசியல் செய்கிறது மத்திய பாஜக அரசு. திமுகவுக்கு ஆதரவு பெருகிவருவதை பொறுத்துக்கொள்ளாத பாஜக அரசு வருமானவரித்துறையை பயன்படுத்துகிறது. சபரீசனுக்கு வருமானவரித்தறை நெருக்கடி  தருகிறது. மத்திய, மாநில அரசுகள் மீதான மக்களின் கோபங்களை திசைதிருப்ப சதி. தமிழக அரசியல் களத்தை அச்சுறுத்துகிறது பாஜக. திமுக அமோக வெற்றி பெறும் என பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளியான நிலையில் இந்த ஐடி ரெய்டு நடத்தப்படுகிறது. 

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பிரதமர் பேசுகிறார். ஆனால், ஆளும்கட்சியின் துணையோடு 3 ஆண்டுகளாக பொள்ளாச்சியில் நடந்த இளம்பெண்களுக்கு நடந்த கொடுமை பிரதமருக்கு தெரியாதா? இந்தியாவிலேயே பெண்கள் அதிகம் பாதிக்கும் மாநிலமாக உள்ள உ.பி.,யில் பாஜக தான் ஆட்சி செய்கிறது. அது பிரதமருக்கு தெரியாதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

TN AGRI BUDGET: திராவிட கட்சிகள் செய்யாததை செய்தாரா விஜய்?! முதல் வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்..!
Tamil Nadu Agri Budget: இனி தடையில்லா விவசாயம் சாத்தியம்..! இலவச மின்சாரத்துக்காக ரூ.7,432 கோடி ஒதுக்கீடு..!