கழகத்தை கலகலப்பாக்கிய கட்டிப்பிடி வைத்தியம்: அறிவாலய அரசியலில் புதிய காட்சிகள்...

First Published Dec 23, 2017, 6:38 PM IST
Highlights
Hug From Stalin Marks Homecoming for Kanimozhi and Raja


வடக்கத்திய கலாச்சாரத்தை வன்மையாக எதிர்த்த தி.மு.க.வின் தலைமை குடும்பத்தினுள் நுழைந்திருக்கும் ‘அணைப்பு கலாச்சாரம்’ தமிழக அரசியலரங்கை அதிர வைத்துள்ளது. 
மாநில சுயாட்சி தத்துவத்தை வலுவாக பற்றிப் பேசும் இயக்கமாக நெடுங்காலமாக தி.மு.க. இருந்து வருகிறது. என்னதான் மத்தியில் அதிகார பகிர்வுக்காக நெடுங்காலமாக காங்கிரஸ், சிறிது காலம் பி.ஜே.பி. என கூட்டணி வைத்திருந்தாலும் வடக்கத்திய வாழ்வியல் முறையை தி.மு.க. என்றைக்குமே விமர்சித்துதான் வந்தது. 

ஆனால் இதெல்லாம் கருணாநிதியின் காலத்தோடு ஏறக்கட்டிவிட்டது தி.மு.க. வடக்கில் மோடியும், மன்மோகனும் அரசியல் ரீதியாக மோதிக்கொண்டாலும் பொது நிகழ்வுகளில் ஒன்றாக கைகோர்த்து நிற்பர். ஒருவரது உடல் சுகவீனத்தை மற்றொருவர் விசாரித்து ஆறுதல் சொல்வர். 

இந்த பழக்கத்தை சமீப காலமாக ஸ்டாலின் துவக்கினார். ஜெ., அப்பல்லோவில் இருந்தபோது அவரை காண சென்றார், ராஜாஜி ஹாலில் அவரது பூத உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்றார். சட்டமன்றத்தில் பன்னீர்செல்வத்தை பார்த்து புன்னகைத்தார், அரசு விழாவில் அமைச்சர் தங்கமணியோடு அளவளாவினார், தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் அமைச்சர்களோடு இன்முகம் காட்டி பேசினார். இதெல்லாமே அரசியல் நாகரிகமாக ஆரோக்கியமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. 

இந்நிலையில் இன்று அறிவாலயத்தில் நடந்திருக்கும் நிகழ்வு தமிழக அரசியலுக்கு புதுசு. விடுதலை தந்த தீர்ப்புக்கு பிறகு டெல்லியிலிருந்து சென்னைக்கு வந்த ராசா மற்றும் கனிமொழிக்கு தி.மு.க. சார்பாக மிகப் பெரிய வரவேற்பு தரப்பட்டது. 

ஸ்டாலின் ராசா மற்றும் கனிமொழி இருவருக்கும் தங்கள் தலைமையின் ராசி நிறமான மஞ்சள் நிற சால்வையை போர்த்தினார். அப்போது ராசா பவ்யமாக சென்று ஸ்டாலினை வயிற்றோடு சேர்த்து கட்டியணைத்தார். அதேபோல் கனிமொழியும் தனது சகோதரர் ஸ்டாலினை ஆர அணைத்து தன் அன்பை வெளிப்படுத்தினார். தங்கையின் இந்த திடீர் அணைப்பில் சட்டென்று நெகிழ்ந்து சில நொடிகள் உடைந்து போனார் ஸ்டாலின். 

என்னதான் கனிமொழியின் விடுதலையை ஸ்டாலின் வரவேற்கிறார் என்றாலும் எப்போதுமே கனி, தளபதியின் அரசியல் தலைமைக்கு கீழே இயங்கிட வேண்டுமென்பதே தி.மு.க. நிர்வாகிகளின் விருப்பம். இந்நிலையில் விடுதலைக்குப் பின் டெல்லியில் இருந்தபடி அறிக்கை விடுத்த கனிமொழி, இனி தீவிர அரசியலில் ஈடுபட்டு கழகத்தை பலப்படுத்துவேன் என்று சொன்னது ஸ்டாலின் தரப்பை கடுப்பாக்கியிருந்தது. இந்நிலையில் இன்று நடந்த காட்சிகள் அறிவாலய மற்றும் கோபாலபுர அரசியலுக்கு புதுசு. 

வணங்குதலும், சால்வை தந்து வாழ்த்துதலுமே தமிழகத்தின் அரசியல் பண்பாக இது நாள் வரை இருந்து வந்தது. ஆனால் மாஜி அமைச்சராக ராசாவும், ராஜ்யசபா எம்.பி.யாக கனிமொழியும் அடிக்கடி டெல்லியிலிருந்து வட இந்திய வாழ்வியல் கலாச்சாரத்தை கற்றிருக்கும் நிலையில் தமிழகத்தினுள்ளும் அது அடியெடுத்து வைத்துள்ளது என்கிறார்கள் விமர்சகர்கள். 
ஆஹாங்!

click me!