எப்படி இருக்கிறார் சசிகலா... அடுத்து நடக்கப்போவது என்ன..? தெளிவாக விளக்கிய மருத்துவர்கள்..!

By Thiraviaraj RMFirst Published Jan 22, 2021, 11:59 AM IST
Highlights


சசிகலாவுக்கு தற்போது காய்ச்சல் இல்லை. உடல்நிலை சீராக உள்ளது என விக்டோரியா மருத்துமனை மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா கூறி உள்ளார்.
 

சசிகலாவுக்கு தற்போது காய்ச்சல் இல்லை. உடல்நிலை சீராக உள்ளது என விக்டோரியா மருத்துமனை மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா கூறி உள்ளார். சசிகலாவுக்கு நேற்று முன்தினம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சல், மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட அவருக்கு சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவரை பெங்களூருவில் உள்ள பவுரிங் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். 


அங்கு வரும்போது அவருக்கு காய்ச்சல் இருந்தது. ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 79 சதவீதமாக இருந்தது. உடனே அவருக்கு ஆக்சிஜன் செலுத்தி சிகிச்சை அளித்தனர். காய்ச்சலை கட்டுப்படுத்தவும் மருந்துகள் வழங்கப்பட்டன. அவரது உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து சசிகலாவின் உறவினர்கள் டி.டி.வி.தினகரன், விவேக், டாக்டர் வெங்கடேஷ், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் உள்பட அ.ம.மு.க.வினர் சிலர் அந்த மருத்துவமனைக்கு வந்திருந்தனர். டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோர், சசிகலாவுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுடன் ஆலோசனை செய்தனர். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்கள் விளக்கி கூறினர். அதன் பிறகு மதியம் 2 மணியளவில் சி.டி.ஸ்கேன் பரிசோதனைக்காக சசிகலா, ஆம்புலன்சில் போலீஸ் பாதுகாப்புடன் விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரை சக்கர நாற்காலியில் வைத்து மருத்துவமனையின் உள்ளே இருந்து ஆம்புலன்சுக்கு அழைத்து வந்தனர்.

அப்போது கட்சியினரை பார்த்த அவர் தனது வலது கையை அசைத்து, தான் நலமுடன் இருப்பதை உணர்த்தினார். அதன் பிறகு விக்டோரியா மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. சசிகலா மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதையொட்டி விக்டோரியா மருத்துவமனை  முன்பு அதிக எண்ணிக்கையில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

டி.டி.வி.தினகரன் மட்டும் மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்பட்டார். அவர் சசிகலாவை சந்தித்து நலம் விசாரித்து அவரை அருகில் இருந்து கவனித்துக் கொண்டார். மற்றவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் சசிகலாவின் உடல்நிலை குறித்து விக்டோரியா அரசு மருத்துவமனை நிர்வாகம் நேற்று மாலை மருத்துவ அறிக்கை வெளியிட்டது. அதில், ’’பெங்களூருவில் உள்ள பவுரிங் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 63 வயதாகும் சசிகலாவுக்கு 2-வது வகை சர்க்கரை, ரத்த அழுத்தம், தைராய்டு போன்றவை இருப்பது தெரியவந்தது. அவருக்கு நீண்டகால நுரையீரல் பாதிப்பும் (எஸ்.ஏ.ஆர்.ஐ.) இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

அவருக்கு பவுரிங் மருத்துவமனையில் ஆன்டிபயாடிக் மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இன்சுலின், ஹெபரின், ஸ்டெராய்டு போன்ற மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. பவுரிங் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பரிந்துரை அடிப்படையில் சசிகலா நேற்று மதியம் 2.30 மணிக்கு விக்டோரியா மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

அவருக்கு சி.டி.ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு நுரையீரலில் தீவிர தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. சசிகலா தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ.) அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது’’ என அதில் கூறப்பட்டுள்ளது. 
பவுரிங் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சசிகலாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருக்கிறதா என்று அறிய ஆன்டிஜென் விரைவு பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனை முடிவில் சசிகலாவுக்கு கொரோனா தொற்று இல்லை என்று வந்தது.

இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு அவருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதற்கான முடிவு நேற்று இரவு வெளியானது. அதில் சசிகலாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து விக்டோரிய ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், சசிகலாவுக்கு தற்போது காய்ச்சல் இல்லை. வழக்கமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு குறைந்தது 10 நாட்கள் சிகிச்சை அளிப்போம். கொரோனாவோடு கடும் நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

click me!