ஸ்டாலினால் எப்படி நீட் தேர்வை ரத்து செய்ய முடியும்..!! பாஜக மாநிலத்தலைவர் எல். முருகன் கேள்வி..!!

By Ezhilarasan BabuFirst Published Sep 16, 2020, 2:42 PM IST
Highlights

காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. ஆட்சியில் அங்கம் வகித்த போது நீட் தேர்வை எதிர்த்து திமுக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இப்போது எப்படி ஸ்டாலினால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியும், 

நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை பாஜக வரவேற்பதாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.  திமுக காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே நீட் அறிமுகப்படுத்தப்பட்டது எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஏற்கனவே கொரோனா மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு உயிரிழக்கும் சம்பவம்  தொடர்கதையாகி வருகிறது. இது ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கி வரும் நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

 

மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து நீட்  தேர்வில் இருந்து விலக்கு பெறும் திராணி அதிமுகவுக்கு இல்லை என திமுக தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில், நீட் தேர்வு என்பது திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக் காலத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்டது எனவும், அப்போதெல்லாம் அமைதியாக இருந்துவிட்டு திமுக தற்போது நீட் விவகாரத்தில் நாடகமாடுகிறது என அதிமுக, திமுகவுக்கு பதிலடி கொடுத்துள்ளது.  நீட் விவகாரம் தமிழகத்தில் அரசியல் பூதாகரமாகி உள்ள நிலையில் தற்போது பாஜகவும் நீட் தேர்வுக்கு காரணம் திமுகவே என விமர்சிக்க தொடங்கியுள்ளது. பாஜக மாநில தலைவர் எல்.முருகன் இன்று சென்னை கிண்டியில் உள்ள எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியார் சிலைக்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், "நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை பாஜக வரவேற்கிறது. திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. ஆட்சியில் அங்கம் வகித்த போது நீட் தேர்வை எதிர்த்து திமுக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இப்போது எப்படி ஸ்டாலினால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியும், கடந்த 2019 மக்களவைத் தேர்தலில், கன்னியாகுமரி தொகுதியில் ஏற்கனவே பாஜக போட்டியிட்டது, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் கன்னியாகுமரி தொகுதியில் மீண்டும் வேட்பாளரை நிறுத்துவது குறித்து கட்சி மேலிடம் முடிவெடுக்கும் என்றார்.
 

click me!