வீ்ட்டுஉணவு, வெஸ்டர்ன் டாய்லட் சிதம்பரத்துக்கு உண்டு: அதோடு 24-ம் தேதிவரை விசாரிக்கலாம்: அமலாக்கப்பிரிவுக்கு நீதிமன்றம் அனுமதி

By Selvanayagam PFirst Published Oct 18, 2019, 7:10 AM IST
Highlights

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்த வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை வரும் 24ம் தேதிவரை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்று அமலாக்கப்பிரிவுக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்தது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக அமலக்கப்பிரிவு தொடர்ந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ தொடர்ந்த வழக்கில்தான் தற்போது திஹார் சிறையில் சிதம்பரம் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்டார். சிபிஐ காவல் முடிந்து தற்போது நீதிமன்ற காவலில் திஹார் சிறையில் சிதம்பரம் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கின் விசாரணை டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குகர் முன் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் சிபிஐ விசாரணை முடிந்து அவர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். அவர் தற்போது திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் சிதம்பரத்தை அக்டோபர் 17-ம் தேதி வரை சிறையில் அடைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தநிலையில் ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்ததாகக் கூறி சிதம்பரம் மீது அமலாக்கப்பிரிவு தனியாக வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறது. சிபிஐ வழக்கில் கைதாகி சிதம்பரம் சிறையில் இருப்பதால், அமலாக்கப்பிரிவு இன்னும் காவலில் எடுத்து சிதம்பரத்தை விசாரிக்கவில்லை. இந்த வழக்கில் சிதம்பரத்தை கைது செய்து காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவு முயன்று வருகிறது. இதற்கான மனுவை சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவு தாக்கல் செய்திருந்தது.

டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹர் முன்பு இந்த வழக்கில் சிதம்பரம் தரப்பு, சிபிஐ தரப்பு வாதங்கள்முடிந்த நிலையில் நீதிபதி அஜெய் குமார் குஹெர் இன்று உத்தரவு பிறப்பித்தார்,அதில் “ ப.சிதம்பரத்தை அமலாக்கப்பிரிவு சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் வரும் 24-ம் தேதிவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கிறேன். ப.சிதம்பரத்துக்கு வீட்டில் சமைக்கப்பட்ட உணவு வழங்கவும், மேற்கத்திய கழிப்பறை, மருந்துகள் வழங்கவும் உத்தரவிடுகிறேன்” எனத் தெரிவித்தார்

இதற்கிடையே ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் சிபிஐ தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்துக்கு 24-ம் தேதிவரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!