
இந்தி மொழி திணிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இரு மொழிக் கொள்கையில் அதிமுக உறுதியாக உள்ளது என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.ஒதமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கை தான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்றும், அதில் அதிமுக உறுதியாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். இந்தி மொழி குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்துக்கு பல மாநிலங்களில் இருந்து எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் இவ்வாறு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு அதிரடி திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான சட்ட திட்டங்களை தமிழகம் எதிர்த்து வருகிறது. குறிப்பாக திமுக ஆட்சிக்கு வந்தது முதல் மத்திய அரசு அறிவிக்கும் திட்டங்கள் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து இரண்டாவது 5 ஆண்டாக ஆட்சியில் உள்ள பாஜக நாடு முழுவதும் இந்தியை தேசிய மொழியாக மாற்ற வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதாவது நாடாளுமன்றத்தின் 37வது அலுவல் மொழி குழுக்கூட்டத்தில் அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது, இந்தி மொழியை உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும். பல மொழி பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது அது இந்தி மொழியில் இருக்க வேண்டும் என்று அமைச்சா் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவரின் இந்த கருத்துக்கு பல மாநிலங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அமித்ஷாவின் இந்த பேச்சைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின் விவரம் பின்வருமாறு:- மத்திய அமைச்சரவைக்கான 70 விழுக்காடு நிகழ்ச்சிநிரல் இந்தி மொழியில் தான் தயாரிக்கப் படுகிறது என்றும் மற்ற மொழிகளை பேசும் மாநில மக்கள் இந்திய மொழியில் பேசவேண்டும் என்றும் ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தி மொழியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் நாடாளுமன்ற ஆட்சி மொழி குழுவின் தலைவர் என்ற முறையில் மாண்புமிகு உள்துறை அமைச்சர் அவர்கள் பேசி இருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. இந்தி மொழி தேவை என்கிற பட்சத்தில் இந்தி மொழியை தாங்களாகவே முன்வந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் தாராளமாக கற்றுக் கொள்ளலாம்.
அதே சமயத்தில் இந்தித் திணிப்பு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறியிருக்கிறார்கள். நீண்ட நாட்களாக தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கை தான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இன்று வரை இந்தியாவில் ஆங்கில மொழி இருக்கிறது என்றால் அதற்கு மூல காரணம் பேரறிஞர் அண்ணா அவர்கள்தான். பேரறிஞர் அண்ணா அவர்களின் இரு மொழிக் கொள்கையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியாக இருக்கிறது என்பதையும், தேசிய கல்வி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட போதே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நிலைப்பாடு தெளிவு படுத்தப் பட்டுவிட்டது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.