
ஜெயலலிதாவின் வாரிசு எனக்கோரும் வழக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஜெயலலிதாவின் வாரிசு என உரிமை கோரி பெங்களூருவை சேர்ந்த அம்ருதா என்ற பெண் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். நேரடியாக உச்ச நீதிமன்றத்தை நாடியதற்கு கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தை நாடுமாறு அறிவுறுத்தியது.
அதன்படி, அம்ருதா மற்றும் ஜெயலலிதாவின் அத்தை மகள் லலிதா ஆகியோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், அவர்கள் ஜெயலலிதாவின் குடும்ப உறுப்பினர்கள் எனவும் ஜெயலலிதாவை அவர் சார்ந்த வைஷ்ணவ முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும். அதனால் அவரது உடலை தோண்டி எடுத்து ஒப்படைக்க வேண்டும் எனவும் கோரியிருந்தனர்.
இந்த வழக்கை நேற்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன், வழக்கை இன்றைக்கு ஒத்திவைத்தார்.
அதன்படி, ஜெயலலிதாவின் டி.என்.ஏ பரிசோதனைக்கு உத்தரவிட கோருதல், அவரது உடலை ஒப்படைக்க கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று விசாரித்தது.
அப்போது, ஜெயலலிதாவை தாய் என உரிமை கோரும் அம்ருதா, ஷோபன் பாபுவை தந்தை என உரிமை கோராதது ஏன்? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதற்கிடையே, இந்த வழக்கில் தன்னையும் இணைத்து கொள்ளுமாறு அதிமுக வழக்கறிஞர் ஜோசப் கோரினார். அதற்கு, ஜெயலலிதாவுக்கும் உங்களுக்கும்(ஜோசப்) என்ன தொடர்பு? அல்லது அம்ருதாவுக்கு உங்களுக்கும் என்ன தொடர்பு? எந்த வகையில் இந்த வழக்கில் உங்களை இணைத்து கொள்ள கோருகிறீர்கள்? தமிழ்நாட்டில் உள்ள 6 கோடி பேரும் இந்த வழக்கில் இணைத்துக்கொள்ள கோரினால், வழக்கின் விசாரணையை மெரினா கடற்கரையிலா நடத்துவது? என நீதிபதி காட்டமாக தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் வாரிசு என கோரும் வழக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் டி.என்.ஏ பரிசோதனை நடத்த வேண்டும். ஜெயலலிதா 75 நாட்கள் சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனையில் அவரது இரத்த மாதிரிகள் உள்ளனவா? என கேள்வி எழுப்பினார். அதற்கு அரசிடம் கேட்டு சொல்வதாக அரசு தரப்பு வழக்கறிஞர் பதிலளித்தார்.