அணை கட்டுவதில் என்ன பிரச்னை..? அரசுக்கு அதிரடி உத்தரவிட்ட ஹகோர்ட் மதுரை கிளை

By karthikeyan VFirst Published Aug 16, 2018, 6:30 PM IST
Highlights

நெல்லை, கோவை, ஈரோடு, வேலூர் மாவட்ட ஆறுகளில் உற்பத்தியாகி வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை தடுப்பணைகளை கட்டி தேக்கக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்குமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.  
 

நெல்லை, கோவை, ஈரோடு, வேலூர் மாவட்ட ஆறுகளில் உற்பத்தியாகி வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை தடுப்பணைகளை கட்டி தேக்கக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்குமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.  

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகாவில் ஓவேலி ஆற்றில் ஆண்டு முழுவதும் தண்ணீர் ஓடுகிறது. இந்த ஆற்றில் தேவாலா என்ற இடத்தில் 15 சிறு நதிகள் சேர்கிறது. பருவமழை காலங்களில் இந்த ஆறுகளில் 166 முதல் 180 டிஎம்சி வரையிலான தண்ணீர் தமிழகத்தில் 15 கி.மீ தூரம் ஓடி கேரளாவுக்குள் நுழைந்து அரபிக்கடலில் கலக்கிறது. எனவே இந்த ஆற்றில் தடுப்பணை கட்டி, தமிழக விவசாயத்துக்கு தண்ணீரை முழுமையாக பயன்படுத்த  உத்தரவிட வேண்டும். அப்படி செய்தால் காவிரி நீருக்காக டெல்டா மாவட்ட விவசாயிகள் காத்திருக்க வேண்டிய நிலை இருக்காது.

மேலும் நெல்லை, கோவை, ஈரோடு, வேலூர் மாவட்ட ஆறுகளில் உற்பத்தியாகி வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை தடுப்பணைகளை கட்டி தேக்கி வைக்க வேண்டும் என அந்த மனுவில் கோரியிருந்தார். 

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு,  இந்த மனு தொடர்பாக தமிழக பொதுப்பணித்துறை செயலர், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர், நீர்வள ஆதார அமைப்பின் திட்ட உருவாக்க தலைமை பொறியாளர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை செப்டம்பர் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

click me!