மதுரை ஆதீன மடத்துக்குள்ளாற நுழையக் கூடாது... நித்தியானந்தாவுக்கு இடைக்காலத் தடை! 

 
Published : Oct 11, 2017, 05:18 PM ISTUpdated : Sep 19, 2018, 01:17 AM IST
மதுரை ஆதீன மடத்துக்குள்ளாற நுழையக் கூடாது... நித்தியானந்தாவுக்கு இடைக்காலத் தடை! 

சுருக்கம்

high court interim stay nithyananda to enter madurai athinam

மதுரை ஆதீன மடத்துக்குள் நித்யானந்தா நுழைவதற்கு, இடைக்காலத்தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், மதுரை ஆதினகர்த்தர் அருணகிரிநாதரின் நிர்வாகத்தில் தலையிடுவதற்கு, நித்யானந்தா மற்றும் அவரது சீடர்களுக்கும் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

மதுரை ஆதீன மடத்துக்குள் நித்யானந்தா நுழைய நிரந்தரத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி, ஜெகதலபிரதாபன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்திருந்த அந்த மனுவில், ''மதுரை ஆதீன மடம் 2,500 ஆண்டு பழைமையானது. இதன் 292வது ஆதீனமாக அருணகிரிநாதர் கடந்த 25 ஆண்டுகளாக இருந்து வருகிறார். கடந்த 2012ல் பிடதியில் தியான பீடம் நடத்திவந்த ராஜசேகர் என்ற நித்யானந்தா, ஆதீன மடத்துக்குள் நுழைய முற்பட்டார். சட்ட விரோதமாகத் தயாரிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், நித்யானந்தா தன்னை ஆதீனம் மடத்தின் 293-வது மடாதிபதியாகப் பிரகடனப்படுத்திக்கொண்டார். 

நித்யானந்தா நியமனத்தை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தோம். அந்த வழக்கில் நித்யானந்தா ஆதீனமாக நியமனம் செய்வதற்கு தகுதியுடையவர் அல்லர் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நித்யானந்தா, மடத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர், நித்யானந்தா மடத்துக்குள் நுழைய நீதிமன்றம் விதித்த தடையை உயர் நீதிமன்றம் உறுதிசெய்தது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுகளை மறைத்து சட்டத்துக்குப் புறம்பாக, நீதிமன்றத்தைத் தவறாகப் பயன்படுத்தி, ஆதீன மடத்தையும் அதன் விலை மதிப்பில்லா சொத்துகளையும் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் உயர் நீதிமன்றக் கிளையில் ஆதீன மடத்துக்குள் செல்ல போலீஸ் பாதுகாப்பு கேட்டு நித்தியனந்தா வழக்கு தொடர்ந்துள்ளார்.

மடத்துக்குள் நுழைவதற்கு நித்யானந்தாவுக்கு போலீஸ் அனுமதி வழங்கினால், தேவையில்லா சர்ச்சைகளும் சட்ட ஒழுங்குப் பிரச்னையும் ஏற்படும். இதனால், ஆதீன மடத்துக்குள் நுழையவும் அருணகிரிநாதரின் நிர்வாகத்தில் தலையிடவும் நித்யானந்தாவுக்கு தடை விதிக்க வேண்டும்; நித்யானந்தாவிடமிருந்து ஆதீன மடத்தைப் பாதுகாக்கவும், மடத்துக்குள் நித்யானந்தா நுழைவதற்கு நிரந்தரத் தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். 

இன்று இந்த வழக்கு, நீதிபதி மகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.  விசாரணையின் போது, மதுரை ஆதீன மடத்துக்குள் நித்யானந்தா நுழைய இடைக்காலத்தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், நித்யானந்தா போலி ஆவணங்கள் தயார் செய்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டு குறித்து, தலைமைச் செயலாளர், இந்து சமய அறநிலையத்துறை, மதுரை ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, இதுதொடர்பாக நித்யானந்தா தரப்பில் விளக்கமளிக்கவும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை  நான்கு வார காலத்துக்கு ஒத்திவைத்தார். 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!