அவரை அரெஸ்ட் பண்ணுங்க ! ஜெயில்ல போடுங்க !! எச்.ராஜா மீது பாயும் திருமாவளவன் ….

First Published Jan 13, 2018, 9:20 AM IST
Highlights
H. Raja should be arrested and imprisoned in the National Security Act


தமிழக  தலைவர்களையும் , இயக்கங்களை, சாதி மதவெறியை தூண்டும் வகையில் தொடர்ந்து பேசி வரும் பாஜன தேசிய தலைவர்  எச்.ராஜாவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது இது தொடர்பாக  திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கவிஞர் வைரமுத்து ஒரு நாளேட்டில் ஆண்டாளின் பாடல்கள் குறித்து கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரின் கருத்து ஒன்றை மேற்கோள்  காட்டியிருந்தார்.

ஆனால் அந்த கருத்தை அவர் வழிமொழிவதாக அக்கட்டுரையில் எங்கும் குறிப்பிடவில்லை. அந்த கட்டுரையை சாக்காக வைத்துக்கொண்டு ஆண்டாளை அவதூறு செய்துவிட்டார் என கவிஞர் வைரமுத்துவின் மீது எச்.ராஜா பழிபோட்டுப் அநாகரிகமாக பேசிவருகிறார் என திருமா குற்றம்சாட்டியுள்ளார்.

எச்.ராஜாவின் பேச்சு சாதி – மதவெறியை கொண்டதாகவும் வன்முறையைத் தூண்டும் விதத்திலும் பொது அமைதியைக் குலைக்கும் விதத்திலும் உள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஏற்கெனவே தந்தை பெரியாரை இழிவுபடுத்தி பேசிப் பதற்றத்தை உருவாக்கினார். பின்னர் இடதுசாரி இயக்கங்களை அவதூறு செய்தார். நடிகர் விஜய் நடித்த திரைப்படத்தை வெளியிடக்கூடாது என தகராறு செய்தார்.

தற்போது கவிஞர் வைரமுத்துவும், அவரது கட்டுரையை வெளியிட்ட நாளேடும் வருத்தம் தெரிவித்த பின்னரும் அநாகரிகமான வார்த்தைகளில் அவதூறு செய்துள்ளார். என்னையும் எமது கட்சியையும் இதே போல அவர் ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்ததையும் வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசியதையும் நாடறியும் என குறிப்பிட்டுள்ளார்.

எச்.ராஜாவின் பேச்சு எப்படியாவது தமிழ்நாட்டில் கலவரத்தை மூட்டிவிட வேண்டும் என்ற அவரது தீய நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. இத்தகைய வெறுப்புப் பேச்சையும் பயங்கரவாதச் செயலாகவே கருத வேண்டும் எனவே தொடர்ந்து சமூகப் பதற்றத்தை உருவாக்கும் வகையில் பேசி வரும் எச்.ராஜாவை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

click me!