"தமிழகம் உருப்பட திராவிடக் கட்சிகளை ஒழிக்க வேண்டும்" - எச்.ராஜா கொக்கரிப்பு

First Published Dec 23, 2016, 11:43 AM IST
Highlights


தமிழகம் உருப்பட வேண்டும், முன்னேற வேண்டுமானால், திராவிடக் கட்சிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்று பாரதியஜனதா கட்சியின் தேசியசெயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

காரைக்குடியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

தமிழகத்தில் தலைமைச்செயலாளர் ராம மோகன் ராவ் வீட்டிலும், அலுவலகத்திலும் வருமானவரித்துறை சோதனைநடத்தியுள்ளது. இந்தியாவிலேயே, ஒரு மாநிலத்தில் முதன் முதலில் தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த சோதனை அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருக்கிறது. திராவிடக்கட்சிகள் இருக்கும் வரை தமிழகம் உருப்படாது. தமிழகம் முன்னேறவேண்டுமானால், திராவிடக் கட்சிகள் ஒழிக்கப்பட வேண்டும்.

திராவிடக் கட்சிகள் ஆட்சியில் தமிழகம் ஊழலில் சிக்கி தகிக்கிறது. தற்போது தலைகுனிவை ஏற்படுத்திவிட்டது. சமீபத்தில் சேகர்ரெட்டி என்பவர் வீட்டில் ரூ.100 கோடிக்கு அதிகமான பணம், 170 கிலோ தங்கம் பிடிபட்டுள்ளது. இவர் ஆளும் அதிமுக கட்சியில் உள்ள முக்கிய அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்.

எனவே தமிழகம் முன்னேற, திராவிடக் கட்சிகள் அனைத்தையும் ஒழித்து, அப்புறப்படுத்த வேண்டும். அப்போதுதான் நல்ல விடிவு காலம் பிறக்கும் என்பதை தற்போது நடக்கும் சம்பவங்கள் கூறிவருகின்றன.

ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும் என்று தி.மு.க. காங்கிரஸ் கட்சிகள் கோரிக்கை விடுப்பதை பார்த்தால், கேலிக்கூத்தாக இருக்கிறது. இன்று தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்க காரணமாக இருந்தவர்களே இந்த இருகட்சிகள்தான்.  எனவே வரும் ஜனவரி 3-ந்தேதி நடத்தப்பட உள்ள ஆர்ப்பாட்ட அறிவிப்பை இரு கட்சிகளும் திரும்பப் பெற வேண்டும்.

ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பது மத்தியஅரசின் அரசாணைதான். இன்னும் ஒருவாரத்தில் அந்த அரசாணை நீதிமன்றத்தில் இருந்து வெளிவந்துவிடும் என நம்புகிறோம். இதற்கு மத்தியஅரசு உறுதுணையாக இருக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

click me!