தொடர்ந்து இழிவு, அவமானப்படுத்தும் எச்.ராஜா... கைது செய்ய கோரி மாநிலம் முழுவதும் காவல் நிலையங்களில் புகார்..??

By Ezhilarasan BabuFirst Published Nov 9, 2020, 12:18 PM IST
Highlights

மாற்றுத்திறனாளிகளின் கண்ணியத்தைக் குறைக்கும் விதத்திலும், இழிவுபடுத்தும் வகையிலும் பொதுவெளியில் பாஜக தலைவர்கள் பேசுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த மாதத்தில் பாஜகவில் இணைந்த குஷ்பு காங்கிரஸ் கட்சியை தாக்குவதற்கு இதுபோன்று பேசி பின்னர் மன்னிப்புக் கோரினார்.

மாற்றுத்திறனாளிகளை தொடர்ந்து இழிவுபடுத்தி வரும் எச்.ராஜாவை கைது செய்யக்கோரி மாநிலம் தழுவிய அளவில் மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில தலைவர் ஜான்சிராணி மற்றும் நம் பொதுச்செயலாளர் நம்பு ராஜன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

மாற்றுத்திறனாளிகளின் கண்ணியத்தைக் குறைக்கும் விதத்திலும், இழிவுபடுத்தும் வகையிலும் பொதுவெளியில் பாஜக தலைவர்கள் பேசுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த மாதத்தில் பாஜகவில் இணைந்த குஷ்பு காங்கிரஸ் கட்சியை தாக்குவதற்கு இதுபோன்று பேசி பின்னர் மன்னிப்புக் கோரினார். நவம்பர் 7 அன்று பாஜகவின் முக்கிய தலைவரான எச்.ராஜா தமிழக அரசை தாக்குவதற்கு மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் விதத்திலான ஊவமையுடன் ஆடியோவில் பேசி டுவிட் செய்துள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்கனவே இது போன்று எச்.ராஜா பேசி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

எச்.ராஜாவின் பதிவு மாற்றுத்திறனாளிகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவனுடைய பேச்சு ஊனமுற்றோர் உரிமைகள் சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும். ஆனால் இதுவரை எச்ச ராஜா  தனது பேச்சுக்கு மறுப்போ வருத்தமோ தெரிவிக்கவில்லை. மாற்றுத்திறனாளிகளில் மனதை புண்படுத்தும் விதத்தில் உள்நோக்கத்துடன் மாற்றுத்திறனாளிகள் விரோத,  மற்றும் சட்ட விரோத அவரின் பேச்சு, மற்றும் டுவிட் அடிப்படையில் எச். ராஜாவை கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையங்களில் நவம்பர் 9 அன்று புகார் அளிப்பது என்றும், சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

click me!