
கிரானைட் கற்களை வெட்டி எடுத்தாக மு.க.அழகிரி மகன் துரைதயாநிதி மீது பதியப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது.
மதுரை மாவட்டம் மேலுார் பகுதியில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக பி.ஆர்.பி. உட்பட பல்வேறு கிரானைட் நிறுவனங்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலூர் அருகே கீழவளவில் ஒலிம்பஸ் கிரானைட் நிறுவன குவாரி இயங்கியது. இங்கு அனுமதி பெற்ற இடத்தை விட அரசுக்கு சொந்தமான இடத்தில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததில் விதி மீறல் தொடர்பாக ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனம் அதன் இயக்குனராக இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் தயாநிதி உட்பட சிலர் மீது கீழவளவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அரசுக்கு 257 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக துரைதயாநிதி உள்ளிட்ட 15 பேர் மீது 2012ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மேலூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இவ்விவகாரத்தில், தயாநிதிக்கு சொந்தமான சில சொத்துக்களை முடக்க உத்தரவிடக் கோரி மதுரை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் மத்திய அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்திருந்தது. அதன்படி, சொத்துக்களை தற்காலிகமாக முடக்கி வைத்து தயாநிதி ஆஜராக சம்மன் அனுப்பி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், கீழமை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி துரைதயாநிதி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஜி.ஜெயச்சந்திரன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, துரைதயாநிதி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துவதாக உத்தரவிட்டு கீழமை நீதிமன்றம் வழக்கை 6 மாதங்களில் விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.