படுக்கை, ஆக்சிஜன் தேவை குறித்து பொதுமக்களுக்கு உதவ கோவிட்-19 ஒருங்கிணைந்த கட்டளை மையம். தமிழக அரசு அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Apr 30, 2021, 2:05 PM IST
Highlights

UCC மையமானது 24*7 நேரமும் தமிழக அரசின் படுக்கை மேலாண்மையை இணைய வழி மூலம் கண்காணித்து, பல்வேறு மருத்துவமனைகளில் உள்ள காலி படுக்கை வசதிகளின் நிலையை அறிந்து கொண்டு அதன் மூலம் தேவைப்படும் பொதுமக்களுக்கு உதவும். 
 

உலக சுகாதார மையம் இந்த கோரோனா வைரஸ் தொற்றினை பெரும் தொற்று நோயாக அறிவித்ததை தொடர்ந்து கோவிட்-19னை தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939ன் கீழ் அறிவிக்கப்பட்டது. மேலும் நோய் தொற்றின் தடுப்பை உறுதி செய்ய தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. தற்போது இந்தியா முழுவதும் உள்ள பல மாநிலங்களைப் போலவே, தமிழகமும் கோவிட்-19 நோய்த்தொற்றுகளின் இரண்டாவது அலைகளைக் காண்கிறது. கோவிட் நோய் தொற்றை எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளிலும் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. 

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக தமிழ்நாடு சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை மற்ற துறைகள் மற்றும் இயக்குநரகங்களுடன் இணைந்து தமிழ்நாட்டின் தேசிய நலவாழ்வு குழும அலுவலகத்தில் கோவிட்-19 ஒருங்கிணைந்த கட்டளை மையத்தை (UCC) அமைக்கப்பட்டுள்ளது.  தற்போதுள்ள 104 சுகாதார சேவை மையத்துடன் இணைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் படுக்கை கிடைப்பது மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் உருளைகள் தேவைகளை நிர்வகிப்பதற்கான சிறப்பு மையமாக UCC செயல்படும். 

மேம்பட்ட செயல்திறன் மற்றும் மேம்பட்ட சுகாதார பயன்களுக்காக UCC தற்போதுள்ள கோவிட் தொடர்பான சேவைகளான முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் (CMCHIS),மருத்துவமனைகள் நிறுவன சட்டம் (CEA) மற்றும் பொது சுகாதார சட்டம் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டு செயல்படும். UCC மையமானது 24*7 நேரமும் தமிழக அரசின் படுக்கை மேலாண்மையை இணைய வழி மூலம் கண்காணித்து, பல்வேறு மருத்துவமனைகளில் உள்ள காலி படுக்கை வசதிகளின் நிலையை அறிந்து கொண்டு அதன் மூலம் தேவைப்படும் பொதுமக்களுக்கு உதவும்.

சுகாதாரத் துறை மற்றும் சென்னை மாநகராட்சி உடன் ஒருங்கிணைந்து சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள அரசு மற்றும் தனியார் சுகாதார மருத்துவமனைகளை  UCC கண்காணிக்கும். கோவிட் படுக்கை வசதிகளை அதிகரிப்பதிலும், ஆக்ஸிஜன் கிடைப்பதை உறுதி செய்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு UCC உடனடி சேவைகளை வழங்கும். படுக்கைகள் தேவைப்படுபவர்களுக்கு ஆதரவாக ஒரு புதிய ட்விட்டர் கணக்கை @104GoTN என்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த ட்விட்டர் கணக்கின் நோக்கம் தனிநபர்கள் நேரடியாக படுக்கைகளைக் கோரக்கூடிய மற்றும் உதவியைப் பெறக்கூடிய ஒரு தளத்தை வழங்குவதாகும். 

அனைத்து கோரிக்கைகளும் UCC வழியாக கையாளப்படும். இதை பரவலாக மக்களிடையே கொண்டு சேர்க்க டிவிட்டர் கணக்கில் #BedsForTN என்னும் ஹாஸ்டாக் (hastag) பயன்படுத்தப்படும். படுக்கை கிடைப்பது தொடர்பாக இவ்வசதியை பயன்படுத்தக்கொள்ளுமாறு பொதுமக்களும், மருத்துவமனைகளும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். தமிழக அரசு மாநிலத்தில் கோவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்த UCC ஒரு குறிப்பிடத்தக்க துணை கட்டமைப்பாக இருக்கும் என்ற தமிழகம் உறுதியாக நம்புகிறது.
 

click me!