கட்சியிலேயே இல்லாத காயத்ரி, குடிச்சா என்ன, கடிச்சா என்ன... தமிழிசை கைகழுவிட ஈகோ காரணமா?

By vinoth kumarFirst Published Nov 29, 2018, 5:25 PM IST
Highlights

இல்லாத கட்சியை தன் இஷ்டத்துக்காக வேறுவிதமாக பயன்படுத்துவது தவறு. இதில் நான் வேறென்ன சொல்ல முடியும்? அவர் எங்கள் கட்சியில் இல்லை, இல்லை.” என்று அடித்து நொறுக்கிவிட்டார் தமிழிசை. 

தமிழ் சினிமாவின் மூன்றாம் நிலை செலிபிரெட்டிகளின் லேட்டஸ்ட் டிரெண்ட்...’செம்ம்ம்மயா பார்ட்டியில குடிச்சுட்டு, செமத்தியா போலீஸ்ல மாட்டிக்கிறது’தான். ஜெய்-யெல்லாம் பல முறை இப்படி சிக்கி, பப்ளிக் பனிஸ்மெண்ட் வரைக்கும் போயிருக்கிறார். ராதிகா ஃபேமில் கொடுத்த பார்ட்டியில் குடியோ குடியென குடித்துவிட்டு மறுநாள் அதிகாலையில் போதை தலைக்கேற காரோட்டி அருண்விஜய் உள்ளிட்டோர் சிக்கிய கதையும், சமீபத்தில் விக்ரமின் மகன் துருவ் செம்ம போதையில் போலீஸ் கமிஷனர் வீட்டின் முன்னேயே விபத்தை நிகழ்த்திய கேவலமும் சிங்கார சென்னை கண்டதுதான். 

இந்நிலையில்தான் சமீபத்தில் நடிகையும், டான்ஸருமான காயத்ரி ரகுராம் இப்படியான ஒரு சிக்கலில் மாட்டினார். அடையாறு பாலம் அருகே அவர் குடிபோதையில் போலீஸில் சிக்கினார்! என்று மறுநாள் நியூஸ் பரவியது. ஆனால் அதற்கு அடுத்த நாட்களோ ‘நான் குடிக்கலை, நான் நல்லவள் அப்படின்னு என் அம்மாவுக்கு தெரியும், நானிருக்கும் பி.ஜே.பி.யில் என்னை பிடிக்காத சிலர் இப்படி வதந்தி கிளப்புகிறார்கள். என் வளர்ச்சி அவங்களுக்கு பிடிக்கலை.’ என்று தொடர்ந்து ட்விட்டரில் தாளித்தார். 

இது தமிழக பி.ஜே.பி.க்குள் பெரும் கரைச்சலை கிளப்பிவிட்டது. கடந்த சட்டமன்ற தேர்தல் நேரத்தில் பி.ஜே.பி.யில் இணைந்தார் காயத்ரி. அவர் இணைந்த போது கிடைத்த பப்ளிசிட்டி மறுநாள் வரை கூட நீடிக்கவில்லை. சென்னையில் உட்கார்ந்து பி.ஜே.பி.யில் தன்னை முன்னிலைப்படுத்திட என்னென்னவோ பண்ணிப் பார்த்தவருக்கு எதுவுமே வேகவில்லை. கடைசியில், ஏதாவது கோஷ்டி நிலைப்பாடு எடுத்தால்தான் முன்னேற முடியும்! என முடிவெடுத்தார். அதன்படி தமிழக பி.ஜே.பி.யில் வானதி சீனிவாசனின் ஆதரவாளராக தன்னை காட்டிக் கொள்ள துவங்கினார். கோயமுத்தூர் தெற்கு சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட வானதி அங்கேயே செட்டிலாகி இருந்தார். 

இதனால் அங்கு சென்ற காயத்ரி அவருடன் ஊர்வலம் போவது, மக்கள் சந்திப்பில் கலந்து கொள்வது என்று தலையை காட்டினார். இதையெல்லாம் கவனித்த தமிழிசைக்கு இவரது போக்கு சற்றும் பிடிக்கவில்லை. தேர்தலில் பி.ஜே.பி. டீம் அடியோடு தோற்றுவிட்ட பின்பு, அக்கட்சியின் முக்கிய புள்ளிகளுக்கே அரசியல் செய்ய ஒன்றுமில்லாத நிலையில் காயத்ரியும் ச்சும்மா தேமே என்று சுற்றி வந்தார். ஆனால், அவரை வானதியின் ஆதரவாளர் என்றே தமிழிசை தரப்பு நினைத்து ஓரங்கட்டி வந்தது.

இந்நிலையில்தான் சமீபத்தில் இப்படியொரு ‘குடி’ சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் காயத்ரி. இதற்கு விளக்கம் அளிக்கிறேன் பேர்வழியென்று அவர் பி.ஜே.பி.யை இழுத்துவிட்டதும் டென்ஷனாகிவிட்டார் தமிழிசை. உடனேதான்...”அந்த காயத்ரி ரகுராம் இப்போது பா.ஜ.க.விலேயே இல்லை. ஒரு நிகழ்ச்சியில் (பிக் பாஸ்) பங்கேற்பதற்காக கட்சியை விட்டு விலகிச் சென்றார். எனவே அவர் இங்கேயே இல்லாத நிலையில், பி.ஜே.பி.யில் தன் வளர்ச்சியை பிடிக்காதவர்கள் இப்படி வதந்தி கிளப்புகிறார்கள்! என்று சொல்வதை எப்படி ஏற்பது? 

இல்லாத கட்சியை தன் இஷ்டத்துக்காக வேறுவிதமாக பயன்படுத்துவது தவறு. இதில் நான் வேறென்ன சொல்ல முடியும்? அவர் எங்கள் கட்சியில் இல்லை, இல்லை.” என்று அடித்து நொறுக்கிவிட்டார் தமிழிசை. இந்நிலையில், தன் பின்னே வராமல் அப்போதே கோஷ்டி அரசியல் பண்ணிய காயத்ரியை சரியான டைம் பார்த்து தட்டி தூக்கி எறிந்துவிட்டார் தமிழிசை. எல்லாம் ஈகோதான் காரணம்! என்று  பி.ஜே.பி.க்குள்ளேயே விமர்சனம் கிளம்பியுள்ளது.

click me!