கஜா புயல் பாதிப்பு பகுதி விசிட்... பாதியில் ஜகா வாங்கிய எடப்பாடி!

By vinoth kumarFirst Published Nov 20, 2018, 12:55 PM IST
Highlights

கஜா புயலில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பலத்த மழை பெய்வதால், தனது பயணத்தை பாதியில் நிறுத்திவிட்டு சென்னை திரும்புகிறார்.

கஜா புயலில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பலத்த மழை பெய்வதால், தனது பயணத்தை பாதியில் நிறுத்திவிட்டு சென்னை திரும்புகிறார். 

கடந்த வாரம் கஜா புயல் ஏற்பட்டு புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்பட 6 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.  இதனால் பொதுமக்கள் தங்களது உடமைகளை இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதையொட்டி அங்கு போக்குவரத்து மட்டுமின்றி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

பல கிராமங்கள் இருளில் மூழ்கி கிடக்கின்றன. சாலைகள் சேதமடைந்து, நடந்து செல்ல முடியாத அளவுக்கு லாயக்கற்ற நிலைக்கு மாறிவிட்டது. இதைதொடர்ந்து அரசு அதிகாரிகள், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து. நலத்திட்ட உதவிகள் செய்ய முடிவு செய்தார்.

அதைதொடர்ந்து இன்று காலை சென்னையில் இருந்து திருச்சிக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்றார்.பின்னர் புதுக்கோட்டை பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த அவர், அப்பகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் தஞ்சாவூர் சென்று, அங்கு சேதமான பகுதிகளை பார்வையிட்டு பொதுமக்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரணம் வழங்கினார். 

இந்த நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு நாகை, திருவாரூர் செல்ல முதல்வர் எடப்பாடி திட்டமிட்டார். ஆனால், அங்கு தற்போது பலத்த மழை பெய்வதால், ஹெலிகாப்டரை இயக்க முடியாது என தெரிவிக்கப்பட்டது. இதனால், அவரது பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது. பின்னர், தஞ்சாவூரில் இருந்து திருச்சி சென்ற அவர், அங்குள்ள விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்து வருகிறார். இன்று மாலை 4 மணிக்கு மேல், சென்னை வரும் விமானத்தில் அவர் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!