Lockdown in Tamilnadu: கட்டுக்கடங்காத வேகத்தில் கொரோனா... மீண்டும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு?

By vinoth kumarFirst Published Jan 5, 2022, 2:08 PM IST
Highlights

கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து மருத்துவ வல்லுநர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, வார இறுதி நாட்களில் வழிப்பாட்டு தலங்களுக்கு அனுமதி இல்லை, கடைகளின் நேரத்தை குறைப்பது, இரவு நேர ஊரடங்கு, ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான வழிமுறைகள் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. 

சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து மீண்டும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த மே மாதம் கொரோனா உச்சத்தில் இருந்தது. ஒரு நாளைக்கு 35 ஆயிரம் பேருக்கும் அதிகமான எண்ணிக்கையில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் காரணமாக கொரோனா படிப்படியாக குறைய தொடங்கியது. கடந்த வாரம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினசரி 600 என்ற அளவுக்கு இருந்தது. இதனால், பொதுமக்களும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் உருமாறி ஒமிக்ரான் என்ற புதிய வைரஸ் தொற்று உலகம் முழுவதும் வேகமாக பரவியது. இந்தியாவிலும் ஒமிக்ரான் வைரஸ் டெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட பெருநகர பகுதிகளில் வேகமாக பரவ தொடங்கியது. இதனால் தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று தமிழகத்தில் 2,731 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினத்துடன் ஒப்பிடும்போது 1003 பேருக்கு கூடுதலாக பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நேற்று சென்னையில், 1489 பேருக்கு அதிகரித்துள்ளது. அதேபோல், பல்வேறு மாவட்டங்களிலும் பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. 

இந்நிலையில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து மருத்துவ வல்லுநர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.  அப்போது, வார இறுதி நாட்களில் வழிப்பாட்டு தலங்களுக்கு அனுமதி இல்லை, கடைகளின் நேரத்தை குறைப்பது, இரவு நேர ஊரடங்கு, ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான வழிமுறைகள் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில், இன்று சட்டப்பேரவை கூட்டம் முடிந்த பின் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.  இந்த ஆலோசனையில் மீண்டும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

click me!