சென்னை மெரீனா கடற்கரை, திருச்சி,மதுரை,சேலம் மற்றும் கோவை பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் இலவச ‘வை-பை’ வசதியை முதலமைச்சர் எடப்பாடி பழன்சாமி தொடங்கி வைத்தார்.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, வணிக வளாகங்கள், பூங்காக்கள் போன்ற பொது இடங்களில், வை-பை என்னும் கம்பியில்லா இணைய வசதி கட்டணமில்லாமல் வழங்கப்படும் என்ற வாக்குறுதி அளித்திருந்தார்.
முதற்கட்டமாக பெரிய பேருந்து நிலையங்கள், பூங்காக்கள் போன்ற 50 இடங்களில் ‘அம்மா வை-பை மண்டலம்’ ஏற்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தார். இதையடுத்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலமாக 8 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் 50 இடங்களில் அம்மா ‘வை-பை’ மண்டலங்கள் அமைக்க தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.
அதன்படி முதற்கட்டமாக, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை, கோவை காந்திபுரம் பஸ் நிலையம், சேலம் மத்திய பஸ்நிலையம், திருச்சி மத்திய பஸ் நிலையம், மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். பஸ்நிலையம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அம்மா ‘வை-பை’ மண்டலங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் நேற்று தொடங்கி வைத்தார்.
அம்மா ‘வை-பை’ மண்டலங்களில் ஒரு நபருக்கு, ஒரு நாளைக்கு 20 நிமிடங்கள் ‘வை-பை’ வசதி இலவசமாக வழங்கப்படும். அதன் பின்னர், பயன்படுத்தப்படும் கம்பியில்லா இணைய சேவை வசதிக்கு மணிக்கு ரூ.10 வீதம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.