மறைந்தார் குஜராத் மாநிலத்தின் அரசியல் சாணக்கியர்; மக்களை கண்ணீரில் தத்தளிக்க விட்டார் கேசுபாய் பட்டேல்.

By Ezhilarasan BabuFirst Published Oct 29, 2020, 1:19 PM IST
Highlights

எப்போது குஜராத் மாநிலத்தில் மோடி பிரச்சாரத்தில் ஈடுபட்டாலும் கேசுபாய் பட்டேலிடம் ஆசிபெற்ற (காலை தொட்டு வணங்கிவிட்டு) பின்னரே அவர் பிரச்சாரத்திற்கு செல்வது வழக்கம்.

குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் கேசுபாய் பட்டேல் வயது (92) மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மரணம் ஒட்டுமொத்த குஜராத் மாநிலத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

குஜராத் மாநிலத்தின் மிக பழுத்த அரசியல் தலைவராக விளங்கியவர் கேசுபாய் பட்டேல்,  தமிழகத்தில் திமுக தலைவர் கருணாநிதியைப் போன்று குஜராத்தில் கேசுபாய் பட்டேல் செல்வாக்கு நிறைந்தவராக இருந்துவந்தார். எப்போது குஜராத் மாநிலத்தில் மோடி பிரச்சாரத்தில் ஈடுபட்டாலும் கேசுபாய் பட்டேலிடம் ஆசிபெற்ற (காலை தொட்டு வணங்கிவிட்டு) பின்னரே  அவர் பிரச்சாரத்திற்கு செல்வது வழக்கம். அந்த அளவிற்கு மதிப்பு மிக்கவராக இருந்து வந்தார் கேசுபாய் பட்டேல். 

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி கேசுபாய் பட்டேலின் உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து கேசுபாய் பட்டேலுக்கும் கொரோனா தொற்று சோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு ஆன்டிஜன் மற்றும் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.  மருத்துவர்கள் கொடுத்த அறிவுரையின்படி காந்தி நகரில் உள்ள தனது வீட்டில் கேசுபாய் பட்டேல் தன்னை தனிமைப்படுத்தி கொண்டதாக அவரது குடும்பத்தினர் அறிவித்தனர். 

பின்னர் அவர் குணமடைந்ததாக கூறப்பட்டது. ஆனாலும் வயது மூப்பு காரணமாக அவர் உடல் நலம் தேறுவதில் சிக்கல் நீடிப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் குஜராத்தில் உள்ள ஸ்டெர்லிங்  என்ற தனியார் மருத்துவமனையில் அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவு குஜராத் மக்கள் மத்தியில் மிகுந்த சோகத்தையும் பேரதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சியினர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

குஜராத் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக 1995 மற்றும் 1998 முதல் 2001  வரை முதலமைச்சராக இருந்தவர் ஆவார். 6 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். 2012ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியை விட்டு வெளியேறி குஜராத் பரிவர்த்தன் என்ற கட்சியை நிறுவினார் கேசுபாய் பட்டேல், அப்போதும் விஸ்வதர் சட்டமன்ற தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். பின்னர் உடல் நலக்குறைவு காரணமாக 2014 ஆம் ஆண்டு தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை துறந்தார். 1960இல் பாரதிய ஜனசங்கம் கட்சியில் இணைந்து அரசியல் வாழ்க்கையை தொடங்கியாவர் ஆவார். 
 

click me!