
புதுச்சேரியில் முன்னாள் முதல்வரும் என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி வீட்டில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் நடைபெறும் சோதனையால் புதுச்சேரியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மக்களவை தேர்தல் கடந்த 11-ம் தேதி முதல் தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இதையடுத்து உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். அதுபோன்று அரசியல் பிரமுகர்கள், அரசியல்வாதிகள் மற்றும் வேட்பாளர்களின் வீடு உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே புதுச்சேரி மக்களவை தொகுதி மற்றும் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் பணம் பட்டுவாடா தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து முன்னாள் முதல்வரும் என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி வீட்டில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இவரது வீட்டில் தற்போது 5 பேர் கொண்ட பறக்கும் படையினர் வீடு, அவரது கார்களில் சோதனையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சி புதுச்சேரி மக்களவை தொகுதியில் போட்டியிடுகின்றது.