பாஜக முன்னாள் சட்டமன்ற வேட்பாளர் நாகரஜ் கைது.. 92 லட்ச ரூபாய் ஏற்றிய வழக்கில் போலீஸ் நடவடிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Jul 27, 2021, 10:04 AM IST
Highlights

கடந்த  2016 ஆம் ஆண்டு தமிழக பாஜக சார்பில் ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் நாகராஜ் (31) இவர் ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வருகிறார்.

பாஜக தலைவர்களுடன் தனக்கு நெருங்கிய நட்பு இருப்பதாக கூறி  22 லட்சம் டைமண்ட் நகைகள் உட்பட மொத்தம் 92 லட்சம் ரூபாயை மோசடி செய்த வழக்கில் பாஜக  முன்னாள் சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட்ட  நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இது அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக அவலங்களை கலைந்து சீர் மிகுந்த சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற உன்னத நோக்கம் உடையது தான் அரசியல் களம், ஆனால் காலப்போக்கில் அது சமூக  விரோதிகள் தங்களை தற்காத்துக் கொள்ளும் கூடாரமாக  மாறி வருகிறது என்றால் மறுப்பதற்கில்லை. அரசியலுக்கு வந்தால் நிறைய பணம் சம்பாதிக்கலாம், யாரை வேண்டுமானாலும் ஏமாற்றிவிட்டு அதிகாரத்தை காட்டி தப்பித்துக்கொள்ளலாம் என்ற எண்ணம்தான் அதற்கு காரணம். அப்படி பாஜகவை சேர்ந்த ஒரு நபர் தனக்கு கட்சியில் அவரைத் தெரியும், இவரைத் தெரியும் என்று கூறி சுமார் 92 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ள சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த  2016 ஆம் ஆண்டு தமிழக பாஜக சார்பில் ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் நாகராஜ் (31) இவர் ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை  அடையாறில் உள்ள பார்மசியில் மேலாளராக பணியாற்றி வந்த முகமது நூருதீன் என்பவருக்கும் நாகராஜுக்கு மிடையே பழக்கம் ஏற்பட்டது, ஒரு கட்டத்தில் தனக்கு பாஜகவின் தலைமையிடம் அதிக செல்வாக்கு உண்டு, எல்லா தலைவர்களிடமும் நட்பு பாராட்டி வருகிறேன், ஏதாவது உதவி வேண்டும் என்றால் தயங்காமல் கேளுங்கள், உங்கள் தொழிலை பெருக்குவதற்கு வங்கியில் எவ்வளவு வேண்டுமானாலும் பணம் வாங்கி தருகிறேன் என நாகராஜ் கூறியுள்ளார். அதை நம்பிய முகம்மது நூருதீன் தனக்கு வங்கியில் லோன் வாங்கி தருமாறு நாகராஜிடம் கூறியுள்ளார்,  அதற்கு  மொத்தம் 75 கோடி ரூபாய் லோன் வாங்கி தருவதாக கூறிய நாகராஜ்,  அதற்கு அதிக செலவாகும் எனவும் தெரிவித்தார். 6.5 லட்சம் ரூபாய் பத்திரப்பதிவுக்கும், 60 லட்சம் ரூபாய் ஸ்டாம்ப் பேப்பர் செலவுக்கும், 22 லட்சம் டைமண்ட் நகைகள் என மொத்தம் 92 லட்சம் ரூபாயை முகமதுவிடம் இருந்து நாகராஜ் பெற்றார். 

ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் லோன் கிடைக்கவில்லை எனவே அதிருப்தி அடைந்த முகமது நூருதீன் நாகராஜ் உடல் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து பெற்ற பணத்தை திருப்பி தருவதாக கூறி செக்கு ஒன்றை நாகராஜ் கொடுத்தார். ஆனால் அந்த குறிப்பிட்ட வங்கி கணக்கில் பணம் இல்லை என தெரியவந்ததால், கடந்த 2019ஆம் ஆண்டு சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் நாகராஜ் மீது முகமது நூருதின் புகார் அளித்தார். நாகராஜ் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அவரது தந்தை விஷ்ணு சாகர் (73) சகோதரி பூர்ணிமா ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். இதனையடுத்து தனிப்படை போலீசார் நாகராஜை இரண்டு ஆண்டுகள் கழித்து கைது செய்து  விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே நாகராஜ் தான் முன்னாள் ஆளுநர் ரோசைய்யாவின் பேரன் எனக் கூறி தொழிலதிபர் ஒருவரிடம் ஒரு கோடி ரூபாய் மோசடி செய்து அதில் கைதாகி சிறையில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தலைமறைவான நாகராஜன் தந்தை மற்றும் சகோதரியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர், நாகராஜ் கைது சம்பவம் பாஜகவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

click me!