இருபது ஆண்டுகளுக்கு மு.க. ஸ்டாலின்தான் முதல்வர்.. அதன் பிறகு உதயநிதி.. தமிழக அமைச்சர் தாறுமாறு.!

By Asianet TamilFirst Published May 20, 2022, 8:38 PM IST
Highlights

தமிழகத்தின் கஜானாவை அதிமுக சுரண்டி விட்டது. திமுக ஆட்சிக்கு வந்து பார்க்கிற போது கஜானாவில் ஒன்றுமே இல்லை. பெட்டியில் 1 ரூபாய் காசு கூட இல்லை. பெட்டியைத் திறந்தால் கடன் பேப்பர் மட்டும்தான் உள்ளது.

மு.க. ஸ்டாலின் 20 ஆண்டுகளுக்கு முதல்வராக இருப்பார். பின்பு உதயநிதி ஸ்டாலின் முதல்வராக தயாராக இருக்கிறார் என தமிழக அமைச்சர்  கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பங்கேற்றார். கூட்டத்தில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசுகையில், “இந்த மண்ணை தொட்டு கும்பிட்டால் ஒவ்வொரு வீட்டையும் தொட்டு கும்பிடுவதை போன்றதாகும். ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று கும்பிட முடியாது அல்லவா? நாமெல்லாம் நல்ல பிள்ளையாக நடந்தால்தான் அடுத்து எம்.பி தேர்தலிலும் வெற்றி பெற முடியும். இன்னும் 20 ஆண்டுகள் வரை நம்முடைய முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் முதல்வராக இருப்பார்.

ஸ்டாலினுக்கு பின்பு உதயநிதி ஸ்டாலின் முதல்வராக தயாராக இருக்கிறார். வாரிசாக இருந்தாலும் கஷ்டப்பட்டுதான் திமுகவில் மேலே வருகிறார்கள். திமுகவை எதிர்த்து சண்டை போட இங்கு ஆட்களே இல்லை. முதலில் நீங்கள் எல்லோரும் சேர்ந்துகொண்ட பிறகு எங்களிடம் சண்டைக்கு வாருங்கள். பத்து ஆண்டுகளுக்கு கேடு கெட்ட ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றது. நம்முடைய ஆட்சி நல்ல ஆட்சி ஆகும். நம்முடைய முதல்வர் நல்ல முதல்வர். முதல்வர் ஸ்டாலின் ஓர் அண்ணனாக, தகப்பனாக, குடும்பத்தின் தலைவராக உள்ளார். தமிழகத்தின் கஜானாவை அதிமுக சுரண்டி விட்டது. திமுக ஆட்சிக்கு வந்து பார்க்கிற போது கஜானாவில் ஒன்றுமே இல்லை. பெட்டியில் 1 ரூபாய் காசு கூட இல்லை. பெட்டியைத் திறந்தால் கடன் பேப்பர் மட்டும்தான் உள்ளது.

திமுக ஆட்சியில் பெண்களுக்குதான் நல்ல யோகம். ஆண்கள் கையில் பணம் கொடுத்தால் பணம் வீடு சேராது எனத் தெரிந்துதான் நம்முடைய தலைவர் பெண்களுக்கு பணம் கொடுத்து வருகிறார். உங்களிடம் பணம் கொடுத்தால் சாராய கடைக்குதான் செல்லும். டெல்லிக்கு பயப்படாத ஒரு தலைமை இருக்கிறடு என்றால், அது நம்முடைய தலைமைதான். டெல்லிக்கு சென்றால் எடப்பாடி பழனிச்சாமி அங்கே தலையை குனிந்து விடுவார். பிரதமர் மோடி முன்னால் மாப்பிள்ளை போல் ஸ்டாலின் அமர்கிறார்” என்று கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசினார்.
 

click me!