டெல்லியில் தமிழக விவசாயிகள் மேற்கொண்டு வரும் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது.
வறட்சி நிவாரணம், பயிர்காப்பீடு, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெல்லி ஜந்தர்மந்தர் மைதானத்தில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தற்கொலை மிரட்டல், குட்டிக் கரணம் அடித்தல், சேலை உடுத்துதல், மாங்கல்யம் நீக்குதல், பாம்பு எலிக் கறி உண்ணுதல், என விவசாயிகள் மேற்கொண்டு வரும் போராட்டம் ஒரு மாதத்திற்கும் மேலாக நீண்டு கொண்டே செல்கிறது.
நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராடும் விவசாயிகளை சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்காமல் பிரதமர் தொடர்ந்து கள்ளமெளனம் சாதித்து வருகிறார்.
தங்களின் போராட்டம் பிரதமரின் மெளனத்தை கலைக்கவில்லையே என்பதால் மேலும் பல்வேறு கவன ஈர்ப்பு போராட்டத்தை விவசாயிகள் முன்னெடுத்துள்ளனர்.
அந்துவகையில் இன்று காலை வளையில் அணிந்து விவசாயிகள் தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். இந்தச் சூழலில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தஞ்சாவூரில் இருந்து டெல்லி வந்துள்ள இசைக் குழு ஒன்று, கிராமியப் பாடல்களைப் பாடியும், மங்கல வாத்தியங்களை இசைத்தும் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
டெல்லி ஜந்தர்மந்தர் மைதானத்தில் தற்போது ஒலித்துக் கொண்டிருப்பது மங்கல இசை அல்ல, தரிசாகிப் போன தங்கள் மண்ணை மீட்டெடுக்க வேண்டும் என்ற விவசாயிகளின் மரண ஓலம் என்பதை மோடி எப்போது புரிந்து கொள்வார்?