முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் கூடியிருந்த தொண்டர்களுக்கு காலாவதியான குடிநீர் பாட்டில் வழங்கியதாக புகார் எழுந்ததால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இரண்டாவது முறையாக நடைபெறும் சோதனை
அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த காலத்தில் பல்வேறு துறைகளில் டெண்டரில் முறைகேடு நடைபெற்றதாக அப்போதே எஸ்.பி வேலுமணி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து முன்னாள் அமைச்சர்களாக இருந்த வீரமணி, வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர், உள்ளிட்ட அமைச்சர்களின் வீடுகளில் அடுத்தடுத்து சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையும் நடைபெற்று வருகிறது. இதில் அரசு துறையில் அதிக வருமானம் உள்ள துறையின் அமைச்சராக இருந்த வேலுமணி 3,928 சதவிகிதம் சொத்து குவித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து இரண்டாவது முறையாக வேலுமணிக்கு சொந்தமான 58 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
தொண்டர்களுக்கு மதிய உணவு
கடந்த ஆகஸ்ட் மாதம் நடபெற்ற சோதனையின் போது எஸ்.பி.வேலுமணி வீடு முன் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். அப்போது தொண்டர்களுக்கு டீ.காபி,ரோஸ்மில்க், காலை மற்றும் மதிய உணவு சுடச்சுட வழங்கப்பட்டது. இதனையடுத்து இரண்டாவது முறையாக சோதனை நடைபெற்று வரும் நிலையில் ஏராளமான தொண்டர்கள் கோயம்புத்தூரில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீடு முன் குவிந்துள்ளனர். இதனையடுத்து அதிமுக கோவை மாவட்ட மூத்த நிர்வாகிகள் கூடியுள்ள தொண்டர்களுக்கு காலையில் சுடச்சுட காபி வழங்கினர். இதனையடுத்து ரோஸ் மில்க்கும் தொண்டர்களுக்கு வழங்கப்பட்டது.
காலாவதியான குடிநீர்?
வெயில் அதிகமாக இருப்பதான் காரணமாக இளைப்பாறுவதற்காக குடி தண்ணீர் பாட்டிலும் வழங்கப்பட்டது. அந்த பாட்டிலை பார்த்த தொண்டர்களுக்கு அதிர்ச்சி அடைந்தனர். அந்த குடிநீர் பாட்டிலில் 2021 ஆம் ஆண்டு 7 வது மாதம் குடிநீர் பேக்கிங் செய்யப்பட்டதாக அச்சடிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த குடிநீர் பாட்டில் காலாவதியாகி இரண்டு மாதம் ஆகிவிட்டதாக அங்கிருந்த தொண்டர்கள் தங்களுக்குள் பேசி வந்தனர். பெரும்பாலான தொண்டர்கள் தண்ணீரை குடிக்க அச்சப்பட்டு அருகிலேயே வைத்து விட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.