சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், காமராஜ், வெல்லமண்டி நடராஜன் ஆகியோருடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணிகள் இணைந்ததை தொடர்ந்து டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கவர்னரை சந்தித்து எடப்பாடி பழனிசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக தனித்தனியாக கடிதம் கொடுத்தனர்.
இதையடுத்து அந்த 19 எம்எல்ஏக்களும் புதுச்சேரியில் உள்ள த்சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் 10 நாட்கள் ஆகியும் இப்பிரச்சனை குறித்து கவர்னர் வித்யாசாகர்ராவ் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், டி.டி.வி.தினகரன், தனது ஆதரவு எம்எல்ஏக்களை அழைத்துக் கொண்டு விரைவில் குடியரசுத் தலைவரை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
இந்த நிலையில் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் அனைவரும் இன்று தலைமை செயலகம் வரவேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி தற்போது முதல்கட்டமாக விழுப்புரம் மற்றும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த எம்.எல்.ஏக்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த சந்திப்பில் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், காமராஜ், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் உடன் உள்ளனர்.