கொஞ்சம் ஏமாந்தால் கேப்பையில் நெய்வடிவதாக கூறுவார் எடப்பாடி... துரைமுருகன் கிண்டல்..!

By Thiraviaraj RMFirst Published Sep 24, 2020, 12:56 PM IST
Highlights

கொஞ்சம் ஏமாந்தால்  ‘மேட்டூர் அணையை கட்டியதே ஜெயலலிதாதான்’என்று கூறினாலும் கூறுவார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் கிண்டலாக சாடியுள்ளார்.

கொஞ்சம் ஏமாந்தால்  ‘மேட்டூர் அணையை கட்டியதே ஜெயலலிதாதான்’என்று கூறினாலும் கூறுவார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் கிண்டலாக சாடியுள்ளார்.

தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் களம் சூடாகி வருகிறது, குறிப்பாக ஆளும் அதிமுக, எதிர்க்கட்சியான திமுக இடையே காரசாரமான தாக்குதல்கள், விமர்சனங்கள், அறிக்கைப் போர், தொடங்கி விட்டது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பதிலடி கொடுப்பதும், அதற்கு மு.க.ஸ்டாலின் எதிர்வினையாற்றுவதும் தொடர் கதையாகி வருகிறது. மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாவுக்கு முதல்வர் எடப்பாடி வக்காலத்து வாங்கியதுடன், மு.க.ஸ்டாலினுக்கு விவசாயத்தைப் பற்றி என்ன தெரியும் என கிண்டலாக தெரிவித்திருந்தார். அதற்கு மு.க.ஸ்டாலின் நேற்று கடுமையான வார்த்தைகளால் முதல்வர் எடப்பாடியை சாடியிருந்தார்.

 இந்நிலையில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது கடுமையான தாக்குதலை தொடுத்துள்ளார். அறிக்கையில், “காவேரி – குண்டாறு திட்டத்தை ரூ.14 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் வரும் 2021 ஜனவரியில் தொடங்கி நிறைவேற்றப்படும்” என்ற அறிவிப்பை இராமநாதபுரத்தில் முதல்வர் பழனிச்சாமி செய்திருக்கிறார். இது ஒன்றும் புதுமை இல்லை. காரணம், சேலத்தில் பேசும்போது, “வரும் ஜூன் மாதம் காவேரி – குண்டாறு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்படும்” என்றார். சட்டமன்றத்தில் பேசும்போது “அக்டோபர் மாதம் அடிக்கல் நாட்டப்படும்” என்றார்.

2020ஆம் ஆண்டில் இப்படி எல்லா மாதங்களிலும் அடிக்கல் நாட்டப்படும் என்று அறிவித்தாகிவிட்டது. எனவேதான், 2021 ஜனவரிக்கு போயிருக்கிறார் முதல்வர். பாராளுமன்றத் தேர்தலுக்காக ஒரு அறிவிப்பு – உள்ளாட்சி மன்றத் தேர்தலுக்காக ஒரு அறிவிப்பு என்று இந்த காவேரி – குண்டாறு திட்டத்தை பயன்படுத்திக் கொண்டவர், 2021-ல் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்காக ஜனவரியில் அடிக்கல் நாட்டு விழா என்கிறார் முதல்வர்.
 
எல்லா திட்டத்திற்கும் இவர்கள் பாடுகின்ற பாட்டையேதான், இப்பொழுது முதல்வரும் பாடியிருக்கிறார். இது எங்களுக்கு கேட்டு கேட்டு புளித்துப் போன சங்கதி. முதல்வர் இத்தோடு நின்றிருந்தால், ஏதோ சாகிற காலத்தில் சங்கரா, சங்கரா என்பதுபோல் பேசுகிறார் என்று விட்டுவிடலாம். ஆனால், அவர் மிகப் பெரிய பொய்யை அல்லவா அந்தக் கூட்டத்தில் பேசியிருக்கிறார். இந்த காவேரி – குண்டாறு திட்டம், “மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட திட்டம்” என்று பேசியிருக்கிறார்.

 மக்களுக்கு மறதி அதிகம் என்ற நினைப்பில், 1998-99ஆம் ஆண்டு மறைந்த முதல்வர் தலைவர் கலைஞர் அவர்களால் அறிவிக்கப்பட்ட திட்டத்தை, யார் இத்தனை காலத்திற்கு ஞாபகம் வைத்திருப்பார் என்ற மனப்பான்மையில் ‘ஜெயலலிதா ஆரம்பித்தார்’ என்று முதல்வர் பழனிச்சாமி பேசியிருக்கிறார். அன்றைக்கு பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த நான் இன்றும் இருக்கிறேன்.

காவேரி – குண்டாறு  திட்டம் மட்டுமல்ல; தாமிரபரணி –கருமேனியாறு திட்டம், சாத்தனூர் – செய்யாறு திட்டம் ஆகிய திட்டங்களைச் சேர்த்துதான் அன்று முதல்வர் கலைஞர் அறிவித்தார். அறிவிப்போடு நில்லாமல், காவேரியில் மிகையாக வரும் நீரை தடுத்து குண்டாறு வரை கொண்டு போக, திருச்சி மாயனூர் அருகில் ஒரு தடுப்பணை கட்ட உத்தரவிட்டார். ரூ.189 கோடியில், அந்த தடுப்பணையை கட்டி முடித்தது நான்தான்; கட்டி முடித்த அந்த அணையை திறந்ததுதான் ஜெயலலிதா.

அதேபோல், தாமிரபரணி – கருமேனியாறு திட்டத்தை துவக்கி, நாலு பகுதிகள் உள்ளடக்கிய அந்த திட்டத்தில், இரண்டு பகுதிகளையும் முடித்ததும் நாங்கள்தான். இந்த பத்தாண்டு காலத்தில் நில ஆர்ஜிதம்கூட இந்த அ.தி.மு.க. அரசு செய்யவில்லை. உண்மை இவ்வாறிருக்க, ‘காவேரி – குண்டாறு திட்டத்தை அறிவித்தது ஜெயலலிதா’என்று முதல்வர் பழனிச்சாமி போட்டாரே ஒரு வெடி!

கொஞ்சம் ஏமாந்தால், “மேட்டூர் அணையை கட்டியதே ஜெயலலிதா” என்று கூறினாலும் கூறிவிடுவார்கள்!”என துரைமுருகன் கிண்டலாக தெரிவித்துள்ளார்.

click me!