வாவ்... சூப்பர் மூவ்... ஓ.பி.எஸை வழிக்கு கொண்டு வந்த எடப்பாடி... தவிடு பொடியான சசிகலாவின் திட்டம்..!

By Thiraviaraj RMFirst Published Jun 14, 2021, 5:42 PM IST
Highlights

இருவரும் தனித்தனியாக அறிவிக்கை வெளியிட்டு வந்த நிலையில் இன்று தீர்மானம் நிறைவேற்றி சசிகலாவின் வருகைக்கு ஆப்பு வைத்துள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவின் தலைமைக்கு ஆளுமை மிக்க நபர்கள் இல்லாததால் தள்ளாட்டமாக உள்ளது. இதனால் அதிமுக இரட்டை தலைமையின் கீழ் செயல்பட்டு வருகிறது. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் உள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது, கொங்கு மண்டலத்தை சேர்ந்த அமைச்சர்களை உடன் வைத்து கொண்டு, தன்னிச்சையாக முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.

கட்சியின் ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓபிஎஸ்சுடன் கலந்து ஆலோசிக்காமல் அவரை ஓரம்கட்டியதாக கூறப்படுகிறது. இதனால், விரக்தியடைந்த ஓபிஎஸ், எடப்பாடியுடன் சில கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் தவிர்த்தார். இதனால் இருவருக்கும் இடையே இருந்த மோதல் வெளிச்சத்திற்கு வந்து சந்தி சிரித்தது. நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலின்போது முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை அறிவிக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வெளிப்படையாக தெரிவித்தனர். இதற்கு துணை முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தான் எப்போதும் 2வது கட்ட தலைவராகவே இருக்க முடியாது. நான்தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்.

அதனால் முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவிக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினார். ஆனால், ஓபிஎஸ்சுக்கு ஆதரவு கிடைக்கவில்லை. மூத்த தலைவர்கள் ஓபிஎஸ்சுடன் பேசி, இந்த ஒரு முறை விட்டுக் கொடுக்கும்படி சமாதானப்படுத்தினர். அதைத் தொடர்ந்து, நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டார். இதனால், விரக்தியடைந்த ஓபிஎஸ் விறுவிறுவென நடையை கட்டினார். அன்று மாலை வீட்டிற்கு சென்று ஓபிஎஸ்சை எடப்பாடி சமாதானப்படுத்தினார்.  இருப்பினும், தனக்கு முதல்வர் வேட்பாளர் பதவி கொடுக்காததால், தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்யாமல் தனது தொகுதியிலேயே ஓபிஎஸ் முடங்கினார்.

 

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததை தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பிடிக்க அதிமுகவில் கடும் போட்டி ஏற்பட்டது. எடப்பாடி பழனிச்சாமியும் அவரது ஆதரவாளர்களும் அந்தப் பதவியை கைப்பற்றத் துடித்தனர். இரு தலைவர்களும் கடுமையாக மோத ஆரம்பித்ததால், எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஓட்டெடுப்பு நடத்தி தலைவரை முடிவு செய்யலாம் என்று முடிவு எடுத்தபோதுதான் ஓ.பன்னீர்செல்வம் பணிந்தார். இதனால் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதிமுக சட்டமன்ற கொறடாவாக எஸ்.பி.வேலுமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை கொறடாவாக சு.ரவி, பொருளாளராக கடம்பூர் ராஜு நியமனம் செய்யப்பட்டுள்ளார். செயலாளராக கே.பி.அன்பழகன், துணை செயலாளராக மனோஜ்பாண்டியன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  இதனையடுத்து சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடிய அதிமுகவினரை உடனடியாக கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என, அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அந்த தீர்மானத்தில் 'தமிழகத்தை சமதர்மத்தின் புதிய பூமியாக மாற்றிட ஏழை, எளிய, உழைக்கும் வர்க்கத்தினரும், புதுவாழ்வு காண புதிய பாதை தேடிய இளைஞர் கூட்டமும், தியாகத் திருவிளக்குகளாம் தாய்க்குலமும் கண்ட மாபெரும் கனவை அதிமுக என்ற ஒப்பற்ற இயக்கத்தின் மூலம் நிறைவேற்றியவர் எம்.ஜி.ஆர்.

எம்ஜிஆரின் மறைவுக்குப் பின்னர், அதிமுகவைக் காணாமல் போகச் செய்துவிடலாம் என்று மனப்பால் குடித்தவர்களின் மனக் கணக்குகளை தூள், தூளாக்கி, மீண்டும் அதிமுகவை உலகம் புகழும் இயக்கமாக்கிக் காட்டியவர் ஜெயலலிதா. தனது வாழ்வின் அற்புதமான 34 ஆண்டுகளை அதிமுகவின் வளர்ச்சிக்காகவும், தமிழகத்தின் உயர்வுக்காகவும் ஆயிரம் இன்னல்களுக்கிடையே அரும்பாடுபட்டவர் ஜெயலலிதா. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்கள் மீது, அதிமுக உடன்பிறப்புகள் தங்களின் உடல், பொருள், ஆவி அனைத்தையும் தந்து, கண்ணை இமை காப்பதுபோல் அதிமுகவைக் காத்து நிற்கும் காவல் தெய்வங்களாய் இடையறாது பணியாற்றி வருகின்றனர்.

'ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் புயல் வீசும்; அனைத்தும் தகர்ந்து போய்விடும்; இனி தமிழகத்தில் குழப்பம் தான் மிஞ்சும்' என்று எண்ணி இருந்தோருக்கு ஏமாற்றத்தைப் பரிசளித்து, 'எங்கள் ஆட்சி என்றும் வாழும் இந்த மண்ணிலே' என்று மெய்ப்பித்து ஜெயலலிதா அளித்துச் சென்ற ஆட்சியை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறோம். இந்த சாதனையைக் கண்டு நம் எதிரிகளும் வியந்து நின்றனர்.

மாபெரும் கூட்டணி, பல ஆயிரம் கோடி செலவு, பகட்டான வாக்குறுதிகள், பசுத்தோல் போர்த்திய புலிகளாய் பகல் வேஷம் என்ற பரிவாரங்களுடன் வந்து, மக்களிடம் நாடகமாடி தேர்தலை சந்தித்த திமுக மற்றும் எதிர் அணி, சட்டப்பேரவைத் தேர்தலில் மிகக் குறைந்த வாக்கு சதவீதத்தில்தான் வெற்றி பெற்றிருக்கிறது.

சூழ்ச்சிகள், தந்திரங்கள், சதிச் செயல்கள் அனைத்தையும் முறியடித்து, மக்களின் பேரன்பைப் பெற்று, அதிமுகவின் தலைமையிலான கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. பிரதான எதிர்க்கட்சியாக, அதிமுகவின் 66 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தமிழகத்தின் நலனுக்காக சட்டப்பேரவையில் உரக்கக் குரல் எழுப்பி, உண்மை மக்கள் தொண்டர்களாகப் பணியாற்ற துடித்துக்கொண்டிருக்கின்றனர்.

உழைப்பைச் சுரண்டும் ஒட்டுண்ணிகளாகவும், நற்பெயரை அழிக்கும் நச்சுக் களைகளாகவும் தங்களை வளப்படுத்திக் கொண்ட சிலர், அதிமுகவை அபகரித்துவிடலாம் என்று வஞ்சக வலையை நாளும் விரித்துக் கொண்டிருக்கின்றனர். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப் போவதாக அறிவித்த திருமதி சசிகலா, இப்போது அதிமுக இவ்வளவு வலுவும், பொலிவும், தொண்டர் பெரும்படையும், மக்கள் செல்வாக்கும் பெற்றிருப்பதைப் பார்த்ததும் அரசியலில் முக்கியத்துவத்தைத் தேடிக்கொள்ள, அதிமுகவை அபகரிக்கும் முயற்சியில் இறங்கப்போவதாக ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் சிலருடன் பேசுவதும், அதை ஊர் அறிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவதுமாக விநோதமான ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்.

மகத்தான இரு தலைவர்களின் ஒப்பற்ற தியாகத்தால் ஓங்கு புகழ் பெற்றிருக்கும் அதிமுக மக்களின் பேரியக்கமாக வரலாற்றில் நிலைபெறுமே தவிர, ஒரு குடும்பத்தின் அபிலாஷைகளுக்காக தன்னை ஒருபோதும் அழித்துக்கொள்ளாது என்பதை நினைவுபடுத்துகிறோம். அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு மாறாகவும், இயக்கத்தின் லட்சியங்களுக்கு விரோதமாகவும் செயல்படுபவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது தயவு தாட்சன்யமின்றி கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, கடந்த 23.5.2021-ம் தேதியிட்ட அறிக்கையின் வாயிலாக தெரியப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடி, அதிமுகவின் வளர்ச்சிக்கும், புகழுக்கும்; இழுக்கும், பழியும் தேடியவர்கள் அனைவரையும் அதிமுகவில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்றும்; இனி அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருப்பினும் அவர்கள் அனைவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், கட்சியின் மூத்த முன்னோடிகளை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

அதிமுக வேட்பாளர்களுக்கும், அதிமுகவின் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வாக்களித்து, 75 சட்டப்பேரவை உறுப்பினர்களை வெற்றிபெறச் செய்ததோடு, 234 தொகுதிகளிலும் தங்களின் பொன்னான வாக்குகளை வழங்கிய வாக்காளப் பெருமக்களுக்கு, சட்டப்பேரவை உறுப்பினர்களாகிய நாங்கள் அனைவரும் கரம்கூப்பி நன்றி கூறுகிறோம். கண்ணின் மணியென அதிமுகவைக் காப்போம். எம்ஜிஆர் கண்ட கனவை நினைவாக்குவோம்.

எனக்குப் பின்னாலும் நூறாண்டுகள் ஆனாலும் கழகம் மக்கள் தொண்டில் முன்னணியில் நின்று பணியாற்றும் என்ற ஜெயலலிதாவின் லட்சியத்தை நிறைவேற்றுவோம் என்று உளமார உறுதி ஏற்கிறோம்' எனத் தெரிவித்துள்ளனர். இருவரும் தனித்தனியாக அறிவிக்கை வெளியிட்டு வந்த நிலையில் இன்று தீர்மானம் நிறைவேற்றி சசிகலாவின் வருகைக்கு ஆப்பு வைத்துள்ளனர்.


 

click me!