
எம்எல்ஏக்களிடம் ஜாதி பாகுபாடு காட்டும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை என்றும் அமைச்சரவையில் மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் கோடைவிழா மற்றும் மலர்க்கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஏற்காட்டில் 42-வது கோடைவிழா இன்று காலை தொடங்கியது. தொடர்ந்து 3 நாட்கள் கோடை விழா-மலர்க் கண்காட்சி நடத்தப்படுகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று இன்று காலை ஏற்காடு கோடை விழாவை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் இரு அணிகள் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
மக்கள் மனங்களில் நிறைந்த மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்தை, சட்டப்படி பேரவையில் திறந்து வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
மாட்டிறைச்சி தடை தொடர்பாக முறையான அறிவிப்பு வந்த பிறகுதான் இது தொடர்பா நடவடிக்கை எடுக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தமிழக அரசு எம்எம்ஏக்களிடையே ஜாதி பாகுபாடு காட்டுவதில்லை என்று தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, தமிழக அமைச்சரவையில் தற்போதைக்கு எந்தவித மாற்றமுமில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.