
எடப்பாடி கம்பெனி, ஆட்சியை விட்டு, வீட்டுக்கு அனுப்பினால் நேராக மாமியார் வீட்டுக்குத்தான் போகணும் என்று அதிமுக அம்மா அணியின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
அண்ணாதுரை பிறந்தநாள் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆர். உருவாக்கிய கட்சிக்கும், ஜெயலலிதா உருவாக்கிய ஆட்சிக்கும் டி.டி.வி. தினகரன் துரோகம் இழைப்பதாகவும், டி.டி.வி. தினகரன் விரைவில் மாமியார் வீட்டுக்கு போவார் என்றும் விழாவில் பேசினார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர், உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்பவர்கள் என கூறினார்.
சென்னை, அடையாறில் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ஆட்சியை விட்டு, வீட்டுக்கு அனுப்பினால் நேராக மாமியார் வீட்டுக்குத்தான் போகணும்.
அந்த பயத்தில்தான் என்னை மாமியார் வீட்டுக்கு அனுப்பலாம் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். மாமியார் வீட்டுக்கு நிச்சயம் அவர்கள் செல்வார்கள்.
நான் மாமியார் வீட்டுக்கு சென்று, வெற்றிகரமாக வெளியில் வந்துள்ளேன். பொதுமக்கள் பணத்தை கொள்ளையடித்தோ, ஊழல் செய்தோ நான் சம்பாதிக்கவில்லை. என் மீது வழக்குகள் எதுவுமில்லை.
எடப்பாடி பழனிசாமிக்கு சகளை முறை வருபவர்கள் எல்லாம் சிறைக்கு சென்றவர்கள். சேகர் ரெட்டி வழக்கில் கைது செய்யப்படலாம் என்று எடப்பாடி பழனிசாமி பயந்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.