
தமிழக அரசு நிர்வாகத்தில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவின் தலையீடு அதிகமாக இருப்பதாக, முதல்வர் எடப்பாடி, பிரதமர் மோடியிடம் குற்றம் சாட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லியில், நேற்று முன்தினம் பிரதமரை சந்தித்த முதல்வர் எடப்பாடி, தமிழத்தின் தேவைகள் குறித்து கோரிக்கை விடுத்ததாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஆனால், சசிகலா குடும்பத்தினர் மற்றும் பன்னீர் தொடர்பான சில குற்றச்சாட்டுக்களையும் முன் வைத்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், அவர், மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, தமிழக அரசு நிர்வாகத்தில் அதிகம் தலையிடுவதாக புகார் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இதே குற்றச்சாட்டை, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவும் மோடி மற்றும் அமித் ஷாவிடம் கூறியதாவும் சொல்லப்படுகிறது.
மத்திய அரசின் நல திட்டங்கள் குறித்து, தலைமை செயலகத்தில் ஆய்வு நடத்திய நாயுடு, அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களை மிரட்டும் தொனியில் குரலை உயர்த்தியதாக ஏற்கனவே கூறப்பட்டது.
இவற்றை எல்லாம், மோடியிடம் சொன்ன எடப்பாடி, துணைவேந்தர்கள் நியமன விஷயத்தில், வெங்கையா நாயுடு சில நெருக்கடிகள் கொடுப்பதாகவும் கூறி உள்ளார்.
அதேபோல், நாயுடுவின் மகள் டொயோட்டா கார் டீலராக இருப்பதால், அமைச்சர்களுக்கு டொயோட்டா நிறுவன கார்கள் வாங்கப்பட்டது குறித்தும் பிரதமர் மோடியிடம் விளக்கி இருக்கிறார்.
இவற்றை எல்லாம் அமைதியாக கேட்ட பிரதமர், இனி அவர் எந்த விஷயத்திலும் தலையிடமாட்டார், பார்த்து கொள்கிறோம் என்று உறுதி அளித்திருக்கிறார்.
அதை தொடர்ந்து, சென்னை திரும்பிய எடப்பாடி மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் என்று கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.