விவசாயிகள் வயிற்றில் பால்வார்த்த எடப்பாடியார்..!! ஜெயலலிதா தொடங்கியதை நிறைவேற்றி தருவதில் உறுதி..!!

By Ezhilarasan BabuFirst Published Jul 17, 2020, 3:02 PM IST
Highlights

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் ஆற்றிய உரை:-

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் ஆற்றிய உரை:- குடிமராமத்து என்ற அற்புதமான திட்டத்தை விவசாய பெருங்குடி மக்களின் பயன்பாட்டிற்காக மாண்புமிகு அம்மாவின் அரசு கொண்டு வந்து, சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது.  விவசாய சங்கங்கள், விவசாய பிரதிநிதிகள், பாசனம் பெறுகின்ற விவசாய குழு மூலமாக இந்தப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குடிமராமத்து திட்டத்தின் மூலமாக பல ஆண்டுகளாக தூர்வாரப்படாத ஏரிகள் ஆழப் படுத்துவதுடன், ஏரியிலிருந்து அள்ளபடுகின்ற வண்டல்மண் விவசாயிகளுடைய நிலங்களுக்கு இயற்கை உரமாக பயன்படுகிறது. பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள 14 ஆயிரம் ஏரிகள் படிப்படியாக நிதி ஒதுக்கீடு செய்து தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் 26 ஆயிரம் ஏரிகள் உள்ளன. கிராமப்புறங்களில் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகளை தூர்வார, அதற்காக கடந்த ஆண்டு 250 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. 

இதன் மூலம் கிராமப்புறங்களில் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள், தூர்வாரப்பட்டு பருவகாலங்களில் பொழிகின்ற மழை நீர் சேமித்து வைக்கப்படுகிறது. இதனால்  விவசாயத்திற்கும் மற்றும் குடிப்பதற்கும் தேவையான நீர் கிடைக்கின்றது. பருவ காலங்களில் அதிகமாக பொழிகின்ற மழையின் காரணமாக வெளியேறி கடலில் வீணாக கலக்கும் உபரி நீரை வறண்ட பகுதிகளில் இருக்கின்ற ஏரிகள், குளங்களில் நிரப்புவதற்கான திட்டம் தீட்டி, விவசாயிகளின் கனவு திட்டமான அத்திக்கடவு அவினாசி திட்டத்தை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் அறிவித்தார்கள்.  சுமார் 1,652 கோடி ரூபாயில் இந்த திட்டம் தொடங்கப்பட்டு, 30 விழுக்காடு பணிகள் முடிவடைந்துள்ளன. 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இந்த பணி முழுமையாக நிறைவேற்றப்பட்டு, விவசாயிகளுக்கும், மக்களுக்கும், தேவையான நீர் வழங்கப்படும். இதனால் 24 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். ஈரோடு மாவட்டத்தில் பருவ காலங்களில் அதிகமாக பொழிகின்ற மழையின் காரணமாக வெளியே வரும் உபரி நீரை சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, பவானிசாகர் அணையில் இருந்து பவானி வரையுள்ள இடைப்பட்ட பகுதியில் ஆற்றில் பல்வேறு இடங்களில் 7 இடங்களில் தடுப்பணை கட்டுவதற்கு அம்மாவுடைய அரசு திட்டமிட்டு வருகிறது. 

குண்டாற்றில் தடுப்பணை கட்டும் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது, பவானிசாகர் அணையிலிருந்து கால்வாய் மூலம் விவசாயிகளுக்கு பாசன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கால்வாய்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. எனவே அக்கால்வாய்களை புனரமைக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் பிரதான தொழிலான ஜவுளித் தொழில் சிறப்படைய கைத்தறி மற்றும் விசைத்தறி தொழில்கள் சிறக்க அம்மாவின் அரசினால் மானிய விலையில் மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்தியாவிலேயே கைத்தறி மற்றும் விசைத்தறிக்கு விலையில்லா மின்சாரம் வழங்கும் ஒரே அரசு அம்மாவினுடைய அரசு. இவ்வாறு ஈரோடு மாவட்டம் பல்வேறு வகைகளில் வளர்ச்சி அடைவதற்கு அம்மா அரசு துணை நிற்கும். ஈரோடு மாவட்டத்திற்கு தேவையான சாலை வசதிகள் வேண்டும் என்ற கோரிக்கைகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி இருக்கிறோம். அதிக அளவில் நல்ல சாலைகள் அமைத்து கொடுத்திருக்கிறோம். இன்னும் சில சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்துவதற்கு மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் சாலைகள் விரிவாக்கம் செய்யப்படும். 

ஈரோடு மாநகராட்சி வளர்ந்து வருகின்ற நகரம், எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, மேம்பாலங்கள் கட்டி திறக்கப்பட உள்ளது. மேலும் காலிங்கராயன் ஹைவேயில் இருந்து திண்டல் பாறை வரை உயர்மட்ட பாலத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஈரோடு மாவட்டத்திற்கு சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் கொடுத்துள்ளோம். மாவட்ட ஆட்சியர் அலுவலக விரிவாக்கத்திற்கான கட்டடப் பணிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவ்வாறு பல பணிகள் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்று முடிந்திருக்கிறது. இன்னும் பல பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மேலும் பல பணிகள் தொடங்கவிருக்கிறது. என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். என அவர் உரையாற்றினார்.

click me!