
“நாங்கள் நினைத்திருந்தால் கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டிருந்த அதிமுக எம்எல்ஏக்களை ஆடு மாடுகளை வாங்குவதை போல விலைக்கு வாங்கியிருப்போம்” என தனது தொகுதியான காட்பாடியில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் அனைவரும் அதிர்ச்சி அடையும் வகையில் பேசினார் முன்னாள் அமைச்சர் துரைமுருகன்.
ஆளும் அதிமுக அரசை எதிர்த்தும் மு.க. ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டும் திமுக சார்பில் காட்பாடியில் பொதுக்கூட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும் காட்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான துரைமுருகன் சரவெடியாய் பட்டாசுகளை கொளுத்தி போட்டார்.
“நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன் கூவத்தூரில் அடிமைகளை அடைத்து வைப்பது போல எம்எல்ஏக்களை அடைத்து வைத்திருந்தனர்.
அப்போதே நாங்கள் நினைத்திருந்தால் பல எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி அதாவது ஆடு மாடுகளை வாங்குவதை போல வாங்கி ஆட்சியை கவிழ்த்திருப்போம்.ஆனால் நாங்கள் அப்படி செய்யவில்லை” என பேசினார்.
ஜெயலலிதா மரணத்தில் நிச்சயம் மர்மம் உள்ளது என பேசிய துரைமுருகன், மருத்துவமனைக்கு ஜெயலலிதாவை பார்க்க சென்ற போது நன்றாக இருக்கிறார் இட்லி சாப்பிடுகிறார், கையசைத்தார் என்று சொன்ன ஓபிஎஸ்தான் தற்போது நீதி விசாரணை வேண்டும் என கூக்குரலிட்டு வருவதாக துரைமுருகன் குற்றம் சாட்டினார்.
ஜெயலலிதாவின் மீது நல்ல மரியாதை வைத்திருந்ததாகவும் ஆனால் அவரை சுற்றியிருந்த கூட்டத்தினர் மர்மத்தை மறைப்பதாகவும் துரைமுருகன் சாடினார்.
காட்பாடி கூட்டத்தில் ஆடு மாடுகளை போல் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கியிருப்போம் என்ற கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.