உள்ளாட்சியில் கெத்து காட்டியிருக்கோம்... நாங்கதான் 3-வது பெரிய கட்சி... டாக்டர் ராமதாஸ் ஹேப்பி!

By Asianet TamilFirst Published Jan 4, 2020, 8:32 AM IST
Highlights

ஒவ்வொரு தேர்தலிலும் பொய்மூட்டைகளை அவிழ்த்து விட்டு மக்களை ஏமாற்றும் வழக்கம் கொண்ட திமுக, இம்முறையும் அதிமுக, பா.ம.க. அங்கம் வகிக்கும் கூட்டணிக்கு எதிராக அவதூறுகளையும், பொய்களையும் அள்ளி வீசியது. அவற்றையெல்லாம் முறியடித்து வெற்றி பெற்றதன் மூலம் பாமக அதன் வலிமையையும், செல்வாக்கையும் உலகிற்கு நிரூபித்து தலைநிமிர்ந்து நிற்கிறது. பாமகவின் கோட்டையாக திகழும் விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்பட்டிருந்தால், இப்போது வென்றுள்ள இடங்களைவிட இரு மடங்கு கூடுதலான இடங்களில் பாமக வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருப்பார்கள்.
 

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வெற்றியின் மூலம் தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி பாமகதான் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது என்று அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 
இதுதொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:


தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பா.ம.க. போட்டியிட்ட இடங்களில் கணிசமான அளவில் வெற்றி பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளைப் பொறுத்தவரை பாமக மொத்தம் 36 இடங்களில் போட்டியிட்டு 16 இடங்களை கைப்பற்றியிருக்கிறது. ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு மொத்தம் 430 இடங்களில் களமிறங்கி 224 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஊராட்சி ஒன்றியங்களைப் பொறுத்தவரை, போட்டியிட்ட இடங்களில் பாமக 52.09 விழுக்காட்டு இடங்களை வென்றிருக்கிறது. ஊராட்சி ஒன்றியங்களில் பிற கட்சிகளைவிட பாமக வெற்றி விழுக்காடு அதிகம்.
மாவட்ட ஊராட்சிகளைப் பொறுத்தவரை களமிறங்கிய இடங்களில் 44.44% இடங்களில் வெற்றி. இது மிகப்பெரிய வெற்றி என்பதில் சந்தேகமில்லை. உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் அதிமுக தலைமையிலான அணி வென்ற இடங்களை விட திமுக தலைமையிலான அணி வென்ற இடங்களின் எண்ணிக்கை மெல்லிய அளவில்தான் அதிகம். ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் நடத்தப்பட்டிருந்தால் அதிமுக அணிதான் முதலிடம் பிடித்திருக்கும். திமுக அணி வென்ற இடங்களைவிட அதிமுக தலைமையிலான அணி வென்ற இடங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
அதேபோல், கட்சி சின்னங்களின் அடிப்படையில் இல்லாமல் சுயேட்சை சின்னங்களின் அடிப்படையில் நடந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்ட பா.ம.க.வினர் ஆயிரக்கணக்கான இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். இவற்றின் அடிப்படையில் தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி பாமகதான் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. 
ஒவ்வொரு தேர்தலிலும் பொய்மூட்டைகளை அவிழ்த்து விட்டு மக்களை ஏமாற்றும் வழக்கம் கொண்ட திமுக, இம்முறையும் அதிமுக, பா.ம.க. அங்கம் வகிக்கும் கூட்டணிக்கு எதிராக அவதூறுகளையும், பொய்களையும் அள்ளி வீசியது. அவற்றையெல்லாம் முறியடித்து வெற்றி பெற்றதன் மூலம் பாமக அதன் வலிமையையும், செல்வாக்கையும் உலகிற்கு நிரூபித்து தலைநிமிர்ந்து நிற்கிறது. பாமகவின் கோட்டையாக திகழும் விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்பட்டிருந்தால், இப்போது வென்றுள்ள இடங்களைவிட இரு மடங்கு கூடுதலான இடங்களில் பாமக வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருப்பார்கள்.
ஆனால், தோல்விபயம் காரணமாக அந்த மாவட்டங்களில் நடைபெறவிருந்த தேர்தலுக்கு திமுக தடை வாங்கிவிட்டது. அந்த மாவட்டங்களுக்கு அடுத்த சில வாரங்களில் தேர்தல் நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும்போது அதிமுக - பா.ம.க. கூட்டணிதான் தமிழகத்தில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற கூட்டணியாக இருக்கும்; இப்போது தற்காலிகமாக சிரிப்பவர்கள், அப்போது நம்மைக் கண்டு வியக்கப்போவது உறுதி.
ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் மக்கள் அளித்த தீர்ப்பை பாமக உவப்புடன் ஏற்றுக் கொள்கிறது. அடுத்து நடைபெறவுள்ள 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள், தமிழ்நாடு முழுமைக்குமான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் ஆகியவற்றை எதிர்கொள்ள பாமக தயாராக உள்ளது.” என்று அறிக்கையில் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

click me!