அப்பாவை போல இருக்காதீங்க... தாத்தாவை போல மாறுங்க... உதயநிதிக்கு உடன்பிறப்புகள் உபதேம்..!

By Thiraviaraj RMFirst Published Jul 20, 2019, 6:28 PM IST
Highlights

மக்களவைத் தேர்தலில் தமிழகம் முழுவதும் பட்டிதொட்டியெங்கும் பிரச்சாரம் செய்து திமுக கூட்டணியின் வெற்றிக்கு வலு சேர்த்தார் என்று சொல்லி மகன் உதயநிதிக்கு கட்சியின் இளவரசாக, இளைஞரணி செயலாளராக பட்டம் சூட்டியிருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.

மக்களவைத் தேர்தலில் தமிழகம் முழுவதும் பட்டிதொட்டியெங்கும் பிரச்சாரம் செய்து திமுக கூட்டணியின் வெற்றிக்கு வலு சேர்த்தார் என்று சொல்லி மகன் உதயநிதிக்கு கட்சியின் இளவரசாக, இளைஞரணி செயலாளராக பட்டம் சூட்டியிருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.

இதில் ஸ்டாலினுக்கு விருப்பம் இருந்ததோ இல்லையோ..? இது துர்காவின் அதீத விருப்பத்தால் நடந்ததாக பரவலாக பேசப்படுகிறது. 
திமுகவைப் பொறுத்தவரை இளைஞரணி செயலாளர் பதவி என்பது கட்சித் தலைவருக்கான ஸ்டெப்னி பதவிதான். அப்படிப் பார்க்கையில் திமுகவின் அடுத்த தலைவர் உதயநிதி தான் என்பதை இப்போதே உணர்த்தி கழகத்தினரை அதை அங்கீகரிக்கவும் வைத்திருக்கிறார் ஸ்டாலின்.

1980-ல், மதுரை ஜான்சி ராணி பூங்காவில் அதிமுகவினரின் சோடா பாட்டில் வீச்சுக்கு மத்தியில் திமுக இளைஞரணிக்கு அச்சாரம் போடப்பட்டது. மதுரை திமுக முன்னோடிகளான காவேரி மணியம், பொன்முத்துராமலிங்கம், அக்கினி ராசு, வைகை நம்பி உள்ளிட்டவர்கள் ஸ்டாலினுக்கு இதற்கான மேடையை அமைத்துக் கொடுத்தார்கள். அந்த மேடைக்குப் பின்னால் கருணாநிதியின் விருப்பமும் கொஞ்சம் இருந்தது. அப்போதுகூட எடுத்த எடுப்பிலேயே ஸ்டாலின் இளைஞரணிக்கு தளபதியாகி விடவில்லை. தொடக்கத்தில் இளைஞரணியை வழிநடத்த ஸ்டாலின், திருச்சி சிவா, வாலாஜா அசேன், பரிதி இளம்வழுதி, தாரை மணியன் ஆகியோரைக் கொண்ட ஐவர் குழுதான் அமைக்கப்பட்டது. ஓர் ஆண்டு கழித்துத்தான் அதன் மாநில அமைப்பாளராக அங்கீகரிக்கப்பட்டார் ஸ்டாலின்.

1983-ல், திமுக இளைஞரணிக்கு மாவட்ட அளவில் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு அமைப்பாளர்களும் நியமிக்கப்பட்டார்கள். இளைஞரணி தொடங்கப்பட்டு ஐந்தாறு ஆண்டுகள் மாநிலக் குழுவில் இருந்த மற்றவர்களின் பெயர்கள் மங்கி ஸ்டாலின் தனித்துவமாகத் தெரிய ஆரம்பித்தார். திருச்சி சிவா, பரிதி இளம்வழுதி மட்டும் தங்களது பேச்சுத் திறமையால் தொடர்ந்து தங்களை முன்னிலைப்படுத்திக் கொண்டே வந்தார்கள். வாலாஜா அசேன் 1989 தேர்தலில் ராணிப்பேட்டை தொகுதியில் நிற்க சீட் கேட்டார். தலைமை மறுத்ததால் சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றார். 1980-ல், திமுக இளைஞரணிக்கு கால்கோள் நட்டவர்களில் திருச்சி சிவா தவிர மற்றவர்களோ அவரது வாரிசுகளோ இப்போது அரசியல் களத்தில் பிரகாசமாய் இல்லை.

ஆனால், இந்தச் சிரமங்கள் எதுவுமே இல்லாமல் இளைஞரணியின் தளபதி ஆகி இருக்கிறார் உதயநிதி. ``எனக்கு துதிபாடுவதும், துதிபாடுபவர்களையும் பிடிக்கவே பிடிக்காது” என்று அவர் சொல்கிறார். ஆனால், அதே கூட்டத்தில் அவருக்குப் பக்கத்தில் இருப்பவர்கள், “இனிமேல் உதயநிதியை சின்னவர் என்றுதான் அழைக்க வேண்டும்” என்கிறார்கள். இதெல்லாம் அவரை எங்கு கொண்டுபோய் நிறுத்துமோ என்ற கவலையும் தொண்டனுக்குள் மெல்ல எட்டிப் பார்க்கிறது.

இவற்றை சுட்டிக்காட்டும் தென் மண்டல திமுகவின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஒருவர், “உதயநிதிக்கு பதவி கொடுத்தது பற்றியோ, வாரிசு அரசியலை விமர்சிக்கும் தகுதியோ திமுக மாவட்டச் செயலாளர்கள் 65 பேரில் யாருக்கும் கிடையாது. ஏனென்று கேட்டால், அவர்கள் அத்தனை பேரும் தத்தமது வாரிசுகளை மாவட்ட அளவில் அரசியலுக்குக் கொண்டுவந்து விட்டார்கள். அதனால் அவர்களால் கருத்தியல் ரீதியாக உதயநிதியின் வருகையை விமர்சிக்க முடியாது.

ஆனால், கட்சியின் நாளைய தலைவராகப் போகும் உதயநிதி கட்சியின் கொள்கை கோட்பாடுகள் பற்றியும் கட்சித் தொண்டனின் நாடித்துடிப்பையும் ஆழ்ந்து படித்துவிட்டு இந்தப் பொறுப்பை ஏற்றிருக்க வேண்டும். தமிழகத்தில் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் பேரூர் கழகத்தின் பெயரைச் சொன்னால் அதன் செயலாளர் யார் என்பதை அடுத்த நொடியே யோசிக்காமல் சொல்வார் கலைஞர். ஆனால், ஸ்டாலினுக்கு அந்தத் திறமை போதவில்லை. அவருக்குத் தெரிந்ததெல்லாம் 65 மாவட்டச் செயலாளர்கள் மட்டும்தான். அவர்கள் சொல்வதுதான் அவருக்கு வேதவாக்கு.

தம்பி உதயநிதி அப்படி இருக்கக் கூடாது. அவர் தனது தந்தையைப் போல் இல்லாமல் தாத்தாவைப் போல் வரவேண்டும் என்பதுதான் எங்களைப் போன்றவர்களின் ஆசை.இளைஞரணி தளபதி உதயநிதி இப்போது ஹம்மர் காரில் செல்கிறார். அவரை வழிநடத்தும் மகேஷ் பொய்யாமொழி, பென்ஸ் காரில் பறக்கிறார். இதெல்லாம் தலைமைக்கும் தொண்டனுக்குமான இடைவெளியை அதிகமாக்கிவிடும்.

கலைஞர் ஒரு இடத்துக்கு வருகிறார் என்றால் எங்கோ ஒரு மரத்தின் உச்சியில் ஏறி நின்றுகொண்டு, ‘டாக்டர் கலைஞர் வாழ்க’ என்று உயிரைக் கொடுத்து கத்துவான் திமுக தொண்டன். அந்தத் தொண்டனின் உணர்வுகளைப் புரிந்தவர் கருணாநிதி. ஆனால், இன்றைக்கு இருப்பவர்கள் அப்படிப்பட்ட தொண்டனைப் பார்த்து, ‘அது அவனோட தலைவிதி’ என்று ரொம்ப எளிதாகச் சொல்லிட்டுப் போய்விடுகிறார்கள்.

போகிற போக்கில் இன்னொன்றையும் உதயநிதி புரிந்துகொள்ள வேண்டும். வந்தேறிகளுக்கும் காசு பணம் வைத்திருப்பவர்களுக்கும் மட்டுமே கட்சிக்குள் வாய்ப்புகள் சாத்தியமாவதால் காலங்காலமாக கட்சியின் ரத்த நாளமாய் இருக்கும் திமுக தொண்டன் ஒருவிதமான விரக்தியில் இருக்கிறான். அவர்களது வலிக்கு மருந்து போட்டு அவர்களை அரவணைத்துச் செல்ல வேண்டிய பெரும் பொறுப்பும் உதயநிதிக்குக் காத்திருக்கிறது” என்று சொன்னார்.


 

click me!