தேர்தல் கதாநாயகனை உருவாக்குவதில் திமுக தீவிரம்..!! அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Oct 14, 2020, 12:04 PM IST
Highlights

அதிமுக தொண்டர்கள் முதல் தலைவர்கள் வரை தேர்தலை எதிர்கொள்ள உற்சாகமாக காத்திருக்கின்றனர். அதேபோல் திமுக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அமைத்த அதே வெற்றி கூட்டணியை சட்டமன்றத்திலும் தொடர்வது என முடிவு செய்துள்ளது.

திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது. அதில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.

அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல், 2021 மே மாதம் நடைபெற உள்ளது, தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் அதற்காக தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. முதன்முதலாக செல்வி ஜெயலலிதா, கலைஞர் கருணாநிதி  என்ற மாபெரும் அரசியல் ஆளுமை மிக்க தலைவர்கள் இல்லாத தேர்தலாக இது நடைபெற உள்ளது. முற்றிலும் மாறுபட்ட தேர்தலாகவே இது நடைபெற உள்ளது. இந்நிலையில் மாநிலத்தின் பிரதான கட்சிகளான அதிமுக-திமுக ஆகிய கட்சிகள் வலுவான கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள திட்டமிட்டு வருகின்றன. அதற்காக இரு கட்சிகளும் பல்வேறு வியூகங்களை வகுத்து வரும் நிலையில், நீண்ட சலசலப்புக்கு பின்னர் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டுள்ளார். 

அதேநேரத்தில் கட்சியை வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கட்சியில் சலசலப்பு இன்றி அதிமுக தொண்டர்கள் முதல் தலைவர்கள் வரை தேர்தலை எதிர்கொள்ள உற்சாகமாக காத்திருக்கின்றனர். அதேபோல் திமுக கடந்த  நாடாளுமன்ற தேர்தலில் அமைத்த அதே வெற்றி கூட்டணியை சட்டமன்றத்திலும் தொடர்வது என முடிவு செய்துள்ளது. இந்நிலையில் திமுக தலைவர் வழக்கம்போல கூடுதல் கவனத்துடன் கட்சியை பலப்படுத்துவது, அடிமட்ட அளவிலான கட்சி கட்டமைப்புகளை வலுப்படுத்துவது என கட்சியில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறார். அதேபோல் மக்கள் செல்வாக்குள்ள செயல் வீரர்களுக்கு பொறுப்புகளை வழங்கி, கட்சியை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மாவட்ட அளவில் கட்சிக்கு புதிய நிர்வாகிகளையும் அறிவித்து உள்ள மு.க ஸ்டாலின் அடுத்த கட்டமாக தேர்தல் வாக்குறுதிகளை வழங்கும் அறிக்கை, அதாவது " தேர்தல் அறிக்கை" தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். 

அதற்காக  8 பேர் கொண்ட குழுவையும் அவர் அமைத்துள்ளார், அதில் திமுக பொருளாளர் டி.ஆர் பாலு, துணைச் செயலாளர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்பி,  நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா, செய்தி தொடர்பாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ் இளங்கோவன், மற்றும் பேராசிரியர் ராமசாமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஏற்கனவே திட்டமிட்டபடி திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம் சென்னை  அண்ணா அறிவாலயத்தில் இன்று தொடங்கியது. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் டி.ஆர் பாலு தலைமையில் கூட்டம்   நடைபெற்று வருகிறது. இதில் அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

click me!