திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்து வருகிறது. இதில், முரசொலி பவள விழாவில் ரஜினி, கமல் ஆகியோரை அழைக்க முடிவு செய்யப்பட்டது.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.
கூட்டத்தில் திமுக பொது செயலாளர் அன்பழகன், முதன்மை செயலாளர் துரைமுருகன், மாவட்டசெயலாளர்கள் மா.சுப்பிரமணியன், ஜெ.அன்பழகன், மாதவரம் சுதர்சனம், பி.கே.சேகர்பாபு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதில், நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும். இதற்காக அடுத்தடுத்த போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள்,கையெழுத்து இயக்கம் நடத்தி, மத்திய அரசுக்கு தெரிவிப்பது என முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், முரசொலி அறக்கட்டளையின் பவள விழாவை விமர்சையாக கொண்டாடவேண்டும். இந்த விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரையும் அழைத்து கவுரவிக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
அதேபோல் விரைவில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்க இருக்கிறது. இதையொட்டி, திமுகவினர், பொதுமக்களை சந்தித்து, தற்போதைய ஆளுங்கட்சியின் செயல்பாடுகளை விளக்கமாக எடுத்துகூறி, வாக்குகளை சேகரிக்க இப்போதே தயாராக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.