ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் விவகாரம்... மீண்டும் உச்ச நீதிமன்றம் சென்ற திமுக... சிக்கல் யாருக்கு?

By Asianet TamilFirst Published Jun 9, 2020, 8:22 AM IST
Highlights

மணிப்பூர் வழக்கை அடிப்படையாகக் கொண்டுதான் 11 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் கடந்த பிப்ரவரியில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டிய எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அணி மாறிய ஐந்து எம்எல்ஏக்களை சட்டப்பேரவைக்குள் செல்ல மணிப்பூர் உயர்நீதிமன்றம் சில  தினங்களுக்கு முன்பு தடை விதித்தது. 

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் கோரும் விவகாரத்தை மீண்டும் உச்ச நீதிமன்றம் கொண்டு சென்றுள்ளது திமுக.
கடந்த 2017-ம் ஆண்டில் சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம், மாஃபா பாண்டியராஜன், செம்மலை உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். இவர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி அளிக்கப்பட்ட புகாரின் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதை எதிர்த்து திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சபாநாயகருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்கு திமுக சென்றது.


 நீண்ட தாமதத்துக்குப் பிறகு, புகாரின் மீது நடவடிக்கை எடுத்து சபாநாயகர் அறிவிக்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரியில் தீர்ப்பு வழங்கி வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது. இதனையடுத்து ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார். அதன்பிறகு அந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. இந்நிலையில் இந்த விவகாரத்தை மீண்டும் உச்ச நீதிமன்றம் கொண்டு சென்றுள்ளது திமுக. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், “ தீர்ப்பு வழங்கி மூன்று மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், சபாநாயகர் இதுவரை தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது சட்டத்துக்குப் புறம்பானது” என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மணிப்பூர் வழக்கை அடிப்படையாகக் கொண்டுதான் 11 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் கடந்த பிப்ரவரியில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டிய எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அணி மாறிய ஐந்து எம்எல்ஏக்களை சட்டப்பேரவைக்குள் செல்ல மணிப்பூர் உயர்நீதிமன்றம் சில  தினங்களுக்கு முன்பு தடை விதித்தது. மணிப்பூர் போல தமிழகத்திலும் 11 எம்.எல்.ஏ.க்கள்  தொடர்பாக உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்று திமுக சார்பில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு ஓரிறு தினங்களில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!